ரயில் நிலையங்களில் இடைத்தரகர்கள் ஏமாறாதீர் என ரயில்வே எச்சரிக்கை

சென்னை: ‘ரயில் நிலையங்களில், ‘டிக்கெட்’ உறுதி செய்து தருவதாக கூறும், இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்’ என, ரயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்க உள்ளதால், ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் அலைமோதும். சிலருக்கு டிக்கெட் உறுதி ஆகாத நிலையில் இருப்பர்.

மற்றொருபுறம் குழுவாக செல்வோரில், ஓரிருவருக்கு டிக்கெட் கிடைக்காத நிலையில், ஒரே ரயிலில் பயணிக்க, டிக்கெட் உறுதி செய்ய முயற்சிப்பர்.

இதை வாய்ப்பாக பயன்படுத்தி, இடைத்தரகர்கள் சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக, ரயில்வே பாதுகாப்பு படைக்கு புகார்கள் வந்துள்ளன.

இது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:

டில்லி, மும்பையை போல், தெற்கு ரயில்வேயிலும், சில இடங்களில் பயணியரிடம், ரயில் டிக்கெட் உறுதி செய்து தருவதாகக் கூறி, பணம் வாங்கி செல்கின்றனர்.

போலி அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு, ரயில் நிலையங்களில், இடைத்தரகர்கள் வலம் வருகின்றனர். எனவே, பயணியர் வெளி ஆட்களிடம் ஏமாற வேண்டாம்.

ரயில்வே முன்பதிவு மையங்கள், டிக்கெட் கவுன்டர்கள் அல்லது ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம், செயலி வாயிலாக மட்டுமே, டிக்கெட் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link