தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தேர்தல் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த நடத்தை விதிகள் தேர்தல் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதோடு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை சென்ட்ரலில் பயணி ஒருவர் கொண்டு வந்த 15 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பெங்களூருவில் இருந்து சென்னை வந்த சதாப்தி ரயிலில் வந்த பயணியை ரயில்வே தேர்தல் பறக்கும்படையினர் சோதனை செய்தபோது அவருடைய பேக்கில் கட்டு காட்டாக 15 லட்சம் ரூபாய் பணம் சிக்கியது. விசாரணையில் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்வதற்காக பணத்தை எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதனால் ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
