ராஜ்யசபாவில் அதிகரிக்கப்போகிறது பா.ஜ.,வின் பலம்: லாபமும் நஷ்டமும் இல்லாத நிலையில் காங்கிரஸ்

ராஜ்யசபா தேர்தல் நடக்கவுள்ள 10 மாநிலங்களில், மஹாராஷ்டிரா, ஒடிஷா, பீஹார், சத்தீஸ்கர், ஹரியானா, அசாம் என ஆறு மாநிலங்களில் பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் பலத்துடன் பா.ஜ., ஆட்சியில் உள்ளது.

இதனால், இந்த தேர்தல் முடிவில், தற்போது ஓய்வுபெறும் எம்.பி.,க்களின் எண்ணிக்கையோடு சேர்த்து, கூடுதலாக எட்டு அல்லது ஒன்பது பேர் புதிதாக பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி சார்பில் ராஜ்யசபாவுக்குள் நுழையப்போகின்றனர்.

எனவே, முன் எப்போதும் இல்லாத வகையில், பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம், ராஜ்யசபாவில் அதிகரிக்கப் போவதாக பார்லிமென்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மஹாராஷ்டிரா, ஒடிஷா, பீஹார், சத்தீஸ்கர், ஹரியானா, அசாம், தமிழகம், மேற்கு வங்கம், தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேசம் என, 10 மாநிலங்களில் உள்ள ராஜ்யசபா எம்.பி.,க்கள், 37 பேர் ஏப்., 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஓய்வுபெறுகின்றனர். இந்த காலியிடங்களுக்கான தேர்தல் மார்ச் 16ல் நடக்க உள்ளது.

பா.ஜ.,

பீஹார், ஒடிஷா, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில், சமீபத்தில் தான் சட்டசபைத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. அங்கு அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதால், இங்கு பா.ஜ., மற்றும் தே.ஜ., கூட்டணி வலுவாக உள்ளது.

மஹாராஷ்டிராவில் மொத்தம் ஏழு இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இம்மாநில சட்டசபையின் மொத்த பலம் 288. இதில், 131 பேர் பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள். எனவே, இங்கிருந்து ஆறு ராஜ்யசபா இடங்களை பா.ஜ., கூட்டணி கைப்பற்றுவது உறுதி. மீதமுள்ள ஒன்றை, எதிர்க்கட்சிகள் ஓரணியாக நின்றால் மட்டுமே வெல்வது சாத்தியம்.

இன்னொரு மாநிலம் பீஹார். இங்கு ஐந்து இடங்களுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இங்குள்ள சட்டசபை தொகுதிகள் 243. இதில், பா.ஜ., மட்டும் 89. கூட்டணி பலம் 133 ஆக உள்ளது. போதுமான பலம் இல்லாததால், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தற்போதுள்ள இரண்டு எம்.பி.,க்களையும் இழக்கப்போகிறது. இங்கும் பா.ஜ., மற்றும் கூட்டணி வெல்லப்போகிறது.

வடகிழக்கு மாநிலமான அசாமில் காலியாகப்போகும் மூன்று இடங்களையும், மீண்டும் பா.ஜ.,வே வெல்லப்போகிறது. ஒடிஷாவில் காலியாகவுள்ள நான்கு இடங்களிலும் பா.ஜ., கையே ஓங்கி நிற்கிறது.

சத்தீஸ்கர், ஹரியானா போன்ற மாநிலங்களிலும், பா.ஜ., முழு பலம் பொருந்தியதாக உள்ளது. எனவே, இம்மாநிலங்களில் பா.ஜ.,வின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று.

காங்.,

காங்கிரசை பொறுத்தளவில், ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களிலிருந்து, நான்கு எம்.பி.,க்களை மட்டுமே பெற உள்ளது. இதன்மூலம், ஏற்கனவே நான்கு பேர் ஓய்வு பெற்று, புதிதாக மீண்டும் நான்கு பேர் ராஜ்யசபாவுக்கு அக்கட்சியின் சார்பில் வரவுள்ளனர். இதனால், அக்கட்சியின் பலம், கூடப்போவதில்லை.

மற்றவை

மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்கப்போகும் ஐந்து இடங்களில், நான்கு இடங்களை திரிணமுல் காங்., கைப்பற்றுவது உறுதி. மீதமுள்ள ஒன்றை பா.ஜ., வெல்லும்.

தமிழகத்தை பொறுத்தளவில் ஆறு இடங்கள் காலியாகிறது. இவற்றில் தி.மு.க., உறுதியாக நான்கு இடங்களை கைப்பற்றும். ஒரு இடம் அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கும். இன்னொரு இடம், கடுமையான போட்டியை சந்திக்க நேரிடலாம் என்பதே நிலைமை.

படிப்படியாக

கடந்த 2014ல், முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது, ராஜ்யசபாவில் பா.ஜ.,வின் பலம் வெறும் 55. இது, 2017ல், 58 ஆக உயர்ந்து, ராஜ்யசபாவில் முதன்முறையாக, தனிப்பெரும் கட்சி என்றானது. பின் மேலும் உயர்ந்து, 2020ல், 92 ஆனது. 2025ல் முதன்முறையாக, 100 என்ற, ‘மேஜிக்’ எண்ணை கடந்து, 103 ஆக உயர்ந்தது.

கூடுதலாக எவ்வளவு?

ராஜ்யசபாவில் மொத்தமுள்ள 243 இடங்களில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியின் தற்போதைய பலம் 134. தற்போது ஓய்வு பெறவுள்ள 37 பேரில், ஒன்பது பேர் பா.ஜ., – எம்.பி.,க்கள். கூட்டணியில், 15 பேர் ஓய்வு பெறுகின்றனர்.

இந்நிலையில்தான், மார்ச் 16 தேர்தலுக்கு பின் ஓய்வுபெறுவோர் எண்ணிக்கையோடு சேர்த்து, கூடுதலாக எட்டு அல்லது ஒன்பது பேர் புதிதாக பா.ஜ., மற்றும் அதன் கூட்டணியின் சார்பில் ராஜ்யசபாவுக்குள் நுழையப்போகின்றனர். இதனால், முன் எப்போதும் இல்லாத வகையில், பா.ஜ.,வின் பலம், ராஜ்யசபாவில் அதிகரிக்கப் போவதாக பார்லிமென்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

– நமது டில்லி நிருபர் –

Source link