சென்னை : ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம், ‘சிப்காட்’ தொழில் பூங்காவில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலையை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட, முதலாவது ஜாகுவார், லேண்ட் ரோவர் காரை ஓட்டிப்பார்த்த அவர், பின்னர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பனப்பாக்கம் சிப்காட் பூங்காவில் ஐந்து ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீட்டில், டாடா குழுமத்தை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் ஜே.எல்.ஆர்., நிறுவனம் நவீன கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கிறது.
அங்கு, 900 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள முதல் அலகு நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
அந்நிறுவனம், இதற்காக 2024 மார்ச்சில், அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிலையில், அடுத்த 16 மாதங்களில் முதல் அலகு பணிகள் முடிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 470 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள டாடா தொழிற்சாலை வாயிலாக 5,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் 10,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலையில், ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் சொகுசு கார்களான ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆகியவை இங்கு தயாரிக்கப்படவுள்ளன.
விழாவில், முதல்வர் பேசியதாவது:
இந்தியாவின் தொழில் முகங்களில் முக்கியமானது டாடா நிறுவனம். பல துறைகளில் தடம்பதித்து, மிகப்பெரிய சாதனைகளை படைத்திருக்கும் நிறுவனம். உலகளவில் பல நாடுகளில் செயல்பட்டு வரும் இந்திய பன்னாட்டு குழுமமாக உள்ளது.
அப்படிப்பட்ட, டாடா நிறுவனத்துக்கும், தமிழகத்துக்கும் ஆழமான உறவு உள்ளது.
இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் என்றால் அது தமிழகம் தான். மின் வாகன உற்பத்தியின் தலைநகரமும் தமிழகம் தான். மோட்டார் வாகன துறையில் தமிழகம் தலைமை பொறுப்பில் இருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த பல கார் உற்பத்தி நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன.
டாடா ஜே.எல்.ஆர்., ஆலை தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டம். இந்த ஆலையில், டாடா நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார்களை உற்பத்தி செய்ய உள்ளது. உலகப்புகழ் பெற்ற, ‘ரேஞ்ச் ரோவர் எவோகியூ’ தயாரிக்கப்பட்டு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தயாரிக்கப்படும் தயாரிப்புகள், உலக சந்தைகளுக்கும் சேர்த்தே தயாரிக்கப்படுகின்றன என்பதற்கான அடையாளம் தான் இந்த ஆலை. வளர்ந்து வரும் புதிய துறைகளிலும் நாம் நுழைந்து, சிறப்பாக செயல்பட வேண்டும்.
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் முதலீடுகளை யார் மேற்கொள்ள வந்தாலும், அவர்களை திறந்த கரங்களோடு, தமிழகம் நிச்சயம் வரவேற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆலை திறப்பு விழாவில், டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், தொழில்துறை அமைச்சர் ராஜா, தலைமை செயலர் முருகானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.
பனப்பாக்கம் சிப்காட் பூங்காவில் ஐந்து ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீட்டில், டாடா குழுமத்தை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் ஜே.எல்.ஆர்., நிறுவனம் நவீன கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கிறது. அங்கு, 900 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள முதல் அலகு நேற்று துவக்கி வைக்கப்பட்டு, முதலாவதாக தயாரான கார் வெளியிடப்பட்டது.
