ராமதாஸ் இல்லாத நேரத்தில் தைலாபுரம் தோட்டம் சென்ற அன்புமணி, அவரது அம்மா சரஸ்வதியிடம் ஆசி பெற்றார். வரும் 23ம் தேதி நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் அன்புமணி 18 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்ற பெயரில் 35 தொகுதிகளில் ராமதாஸ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். சேலம் மேற்கு தொகுதியில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் அருளை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ராமதாஸ் நேற்று காலை சேலம் சென்றார். அவரது மகள் ஸ்ரீகாந்தியும் பிரசாரத்திற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மாலை கடலுார் மாவட்டத்தில் பிரசாரம் செய்வதற்காக, காட்டுமன்னார்கோவில் சென்ற அன்புமணி, பகல் 1.30 மணியளவில் தைலாபுரம் தோட்டம் சென்றார்.
அங்கு தனது அம்மா சரஸ்வதியை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார். அவருடன் சேர்ந்த மதிய உணவு சாப்பிட்டார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்த அவர், காட்டுமன்னார்கோவில் புறப்பட்டுச் சென்றார்.
