புதுடில்லி: பீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகிய மூத்த தலைவர் கே.சி.தியாகி, ஆர்.எல்.டி., எனப்படும் ராஷ்ட்ரீய லோக் தளத்தில் நேற்று இணைந்தார்.
பீஹாரில், முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் தலைமையிலான சமதா கட்சியும், மற்றொரு முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளமும், 2003 அக்டோபரில் இணைக்கப்பட்டு ஐக்கிய ஜனதா தளமாக மாறியது.
அப்போது முதல், அக்கட்சியின் முகமாக பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் இருக்கிறார்.
ஐக்கிய ஜனதா தளம் உருவானது முதலே, கட்சியில் தலைமை பொதுச்செயலர், தலைமை செய்தி தொடர்பாளர், அரசியல் ஆலோசகர் என பல்வேறு பதவிகளை வகித்தவர் கே.சி.தியாகி.
ராஜ்யசபா முன்னாள் எம்.பி.,யான இவர், கடந்த வாரம் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து திடீரென விலகினார்.
இந்நிலையில், ராஷ்ட்ரீய லோக் தள கட்சியில், அதன் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெயந்த் சவுத்ரி முன்னிலையில் நேற்று கே.சி.தியாகி இணைந்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஐக்கிய ஜனதா தளத்திற்கும், ராஷ்ட்ரீய லோக் தளத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை. சவுத்ரி சரண் சிங், கற்பூரி தாக்கூர் மற்றும் ராம் மனோகர் லோஹியா போன்ற தலைவர்கள் தான், இரு கட்சிகளுக்குமே சித்தாந்த தலைவர்கள். பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருடன் எந்த பிரச்னையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
