புதுடில்லி: இந்தியாவின் வளர்ச்சிக்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4.60 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க, உலக வங்கி சம்மதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கும், உலக வங்கி குழுமத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தனியார் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் ஆண்டுதோறும் 1.20 கோடி இளைஞர்கள் பணிக்கு தயாராகும் நிலையில், வேலைவாய்ப்புகள் அதிகம் நிறைந்த துறைகளில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக்கும் அரசின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.
தனியார் மூலதனத்தைப் பயன்படுத்தி பொது நிதியை அதிகரிப்பது, நாடு முழுதும் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, உலக வங்கியின் உலகளாவிய அனுபவத்தின் வாயிலாக வளர்ச்சி திட்டங்களை மேம்படுத்துவது ஆகியவற்றில் இது கவனம் செலுத்துகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கான இதுபோன்ற ஒப்பந்தங்கள் வெறும் நிதியை மட்டுமல்லாமல், அறிவு பரிமாற்றம், தொழில்நுட்ப உதவி ஆகியவற்றையும் மையப்படுத்தியிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
