ரோம்: ஈரான் போர் ஜூன் மாதம் வரை நீடித்தால் மத்திய கிழக்கில் கிட்டத்தட்ட 4.50 கோடி பேர் பட்டினி கிடக்க நேரிடும் என்று ஐநா எச்சரித்துள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போர் தொடர்ந்து நீடிக்கிறது. போரின் தாக்கம் வளைகுடா நாடுகளிலும் எதிரொலிக்க, அதன் பாதிப்புகள் பற்றிய கவலையை ஐநா உலக உணவு திட்ட அமைப்பு வெளியிட்டு இருக்கிறது. போர் காரணமாக மத்திய கிழக்கில் மட்டும் 4.50 கோடி பேர் பசிக்கொடுமைக்கு ஆளாவார்கள் என்று அந்த அமைப்பு எச்சரித்து இருக்கிறது.
இதுகுறித்து அந்த அமைப்பின் இணை நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவு கூறி இருப்பதாவது;
மத்திய கிழக்கில் தற்போது நடக்கும் போர் ஜூன் மாதம் வரை நீடிக்கும் பட்சத்தில் விலைவாசி உயர்வால் கூடுதலாக 4.50 கோடி பேர் கடுமையான பட்டினிக்கு தள்ளப்படலாம். உலகளவில் பசிக் கொடுமையை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இது இட்டுச்செல்லும். மிகவும் ஒரு மோசமான நிலைமை ஆகும்.
ஏற்கனவே போதிய உணவின்றி 31 கோடியே 90 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். போரால், உலகின் சில பகுதிகளுக்கு உயிர்காக்கும் பொருட்கள் அனுப்புவது தாமதமாகி வருகிறது. போர் ஆரம்பித்த நாளில் இருந்து கப்பல் போக்குவரத்து செலவுகள் 18 சதவீதம் அதிகரித்துள்ளன. மேலும் சில கப்பல்கள் வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டு உள்ளன.
இவ்வாறு இணை நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவு கூறி உள்ளார்.
