லண்டன்: பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசிய அரசு ஆவணங்களைப் பகிர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர், 11 மணி நேர விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.
விசாரணை
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, பல்வேறு நபர் களுக்கு அவர்களை விருந்தாக்கிய அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019ல் தற்கொலை செய்து கொண்டார். அவர் தொடர்பான ஆவணங்கள் வெளியாகி, உலகையே உலுக்கி வருகிறது. ஜெப்ரிக்கு சர்வதேச அளவில் முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லசின் இளைய சகோதரரும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது செய்யப்பட்டார். எப்ஸ்டீன் ஆவணங்களின்படி, ஆண்ட்ரூ 2001 – 11 வரை பிரிட்டன் அரசின் வர்த்தக துாதராக பணியாற்றியபோது, ரகசிய ஆவணங்களை எப்ஸ்டீனுக்கு அனுப்பியதற்கான சாட்சியங்கள் உள்ளன.
இதையடுத்து, தேம்ஸ் வேலி போலீஸ், 66வது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருந்த ஆண்ட்ரூவை நேற்று கைது செய்தனர். ஏற்கனவே எப்ஸ்டீன் உடனான தொடர்புகளால் சர்ச்சையில் சிக்கியிருந்த ஆண்ட்ரூவின் ‘இளவரசர்’ மற்றும் ‘டியூக் ஆப் யார்க்’ போன்ற அரசப் பட்டங்கள் பறிக்கப்பட்டன.
மீண்டும் கைது
முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மீது இதுவரை குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாத நிலையில், 11 மணி நேர விசாரணைக்குப் பின் போலீசார் அவரை விடுவித்தனர். மேலும், பெர்க்ஷயர் மற்றும் நார்போக் பகுதிகளில் உள்ள ஆண்ட்ரூவின் வீடுகளில் சோதனை தொடர்கிறது. விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அவர் மீண்டும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
