லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடரின் அடுத்த அமர்வில், இந்த தீர்மானம் கொண்டு வரப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஓம் பிர்லாவுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், ஜன., 28ல், பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. கடந்த 1ல், 2026 – 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி எம்.பி.,க்கள் பேசினர்.

தொடர் அமளி

காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதியதாகக் கூறப்படும், இதுவரை வெளியிடப்படாத அவரது சுயசரிதையான, ‘போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி’ என்ற புத்தகத்தை மேற்கோள்காட்டி பேசினார்.

இதற்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள்காட்டி சபையில் பேசக் கூடாது’ என, சபாநாயகர் ஓம் பிர்லாவும் கண்டிப்பு காட்டினார்.

அப்போது துவங்கிய எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் அமளி இதுவரை ஓயவில்லை. அவர்களின் ரகளையால், ஜனாதிபதி உரைக்கு பதிலுரை அளிக்க பிரதமர் மோடியால் லோக்சபாவுக்கே வர முடியாத சூழல் ஏற்பட்டது.

இது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ‘எதிர்க்கட்சி பெண் எம்.பி.,க்கள் பிரதமர் மோடியின் இருக்கையை முற்றுகையிட்டு காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுப்பு

‘பிரதமர் சபைக்கு வந்தால் அவர்கள் எதிர்பாராத செயல்களில் ஈடுபடக் கூடும் என்ற உறுதியான தகவல் எனக்கு கிடைத்தது. இதனாலேயே பிரதமர் மோடியை பதிலுரை தர சபைக்கு வர வேண்டாம் என, கேட்டுக்கொண்டேன். அதை ஏற்று அவரும் வரவில்லை’ என்றார். இந்த குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்.பி.,க்கள் திட்டவட்டமாக மறுத்தனர்.

இந்நிலையில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வில், இந்த தீர்மானம் கொண்டு வரப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில், காங்., – தி.மு.க., – திரிணமுல் காங்., உட்பட, ‘இண்டி’ கூட்டணி எம்.பி.,க்கள் கையெழுத்திடுவர் என, கூறப்படுகிறது

லோக்சபாவில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், சபாநாயகர் ஓம் பிர்லா மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் தீர்மானம் தோல்வி அடைவது உறுதி. இது எதிர்க்கட்சிகளுக்கும் நன்றாக தெரியும். எனினும், அவருக்கு நெருக்கடி தரவே இந்த தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

எப்போது நோட்டீஸ்?

லோக்சபா விதிகளின்படி, சபாநாயகரை பதவியில் இருந்து நீக்க வழிவகை செய்யும் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த நோட்டீசை, 20 நாட்களுக்கு முன்னரே முறைப்படி அளிக்க வேண்டும். கூட்டத்தொடரின் முதல் அமர்வு இந்த வாரம் முடிகிறது. அதனால், மார்ச் 9ல் துவங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வில் இதற்கான நோட்டீஸ் வழங்கப்படலாம்.

காரணம் என்ன?

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு பேச அனுமதி மறுப்பது பெண் எம்.பி.,க்கள் மீது குற்றம் சுமத்தியது பா.ஜ., – எம்.பி.,க்கள் சிலருக்கு முன்னுரிமை வழங்கி, இஷ்டம் போல சபைக்குள் பேச விடுவது எட்டு எம்.பி.,க்களை கூட்டத்தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்தது இவற்றை குறிப்பிட்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வருகின்றன.

காங்., பெண் எம்.பி.,க்கள் கடிதம்

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் பெண் எம்.பி.,க்களான பிரியங்கா, ஜோதிமணி, சுதா, வர்ஷா கெய்க்வாட், ஜோத்சனா மஹானி உள்ளிட்டோர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சபாநாயகராகவும், லோக்சபாவின் அரசியலமைப்பு பாதுகாவலராகவும் உள்ள நீங்கள், ஆளும் கட்சியின் அழுத்தத்தால் காங்கிரசை சேர்ந்த பெண் எம்.பி.,க்களுக்கு எதிராக பொய்யான, ஆதாரமற்ற, அவதுாறான குற்றச்சாட்டுகளை கூறும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.
பிரதமர் மோடி சபைக்கு வராதது எங்களால் ஏற்பட்ட அச்சுறுத்தலினால் அல்ல; பிரதமருக்கு எதிர்க்கட்சியை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை. வன்முறை மற்றும் மிரட்டலில் நம்பிக்கை இல்லாதவர்கள் நாங்கள். ஆளுங்கட்சியின் தொடர்ச்சியான அழுத்தத்திற்கு நீங்கள் ஆளாகியுள்ளீர்கள். லோக்சபாவின் பாரபட்சமற்ற பாதுகாவலராக செயல்படுமாறு உங்களை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பியுஷ் கோயலுக்கு எதிராகbஉரிமை மீறல் தீர்மானம்

அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு இறுதி கட்டத்தை எட்டியதாக கடந்த 3ம் தேதி பார்மென்டில், வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 7ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அறிவித்தார். பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில், அரசின் கொள்கை ரீதியான முடிவுகளை பார்லி.,க்கு வெளியே அறிவித்தது உரிமை மீறல் செயல் என தி.மு.க., – எம்.பி., சிவா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கோரி, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து பதிலளித்த சி.பி.ராதாகிருஷ்ணன், “இது தொடர்பான பார்லி.,யில் அமைச்சர் பியுஷ் கோயல் விளக்கமளித்துவிட்டார். இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” என்றார்.

– நமது டில்லி நிருபர் –

Source link