வக்கீல் அபிஷேக் மனு சிங்விக்கு ரூ.2558 கோடி சொத்து; மீண்டும் ராஜ்யசபாவுக்கு அனுப்பும் காங்கிரஸ்

புதுடில்லி: தமக்கு ரூ.2558 கோடி மதிப்புள்ள சொத்துகள், ரூ.374 கோடி ஆண்டு வருமானம் இருப்பதாக ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவில் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரசின் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளராகவும் இருப்பவர் அபிஷேக் மனு சிங்வி. அடிப்படையில் இவர் ஒரு வக்கீல். தற்போது தெலுங்கானாவில் இருந்து ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள அவர், வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் தமது சொத்துகள், கையிருப்பில் உள்ள ரொக்கம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளார்.

பிரமாண பத்திரத்தில் அவரின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ.2558 கோடி ஆகும். ரூ.374 கோடி ஆண்டு வருமானமாக பெறுவதாக அதில் குறிப்பிட்டு உள்ளார். 2024-2025ம் ஆண்டில் 374 கோடி ரூபாய், 2023-2024ம் ஆண்டில் 333 கோடி ரூபாய், 2022-2023ம் ஆண்டில் 359 கோடி ரூபாய், 2021-2022ம் ஆண்டில் 290 கோடி ரூபாய், 2020-2021ம் ஆண்டில் 158 கோடி ருபாய் வருமானம் இருந்ததாக தெரிவித்து உள்ளார். அதாவது 2020-2021ம் ஆண்டில் 158 கோடி ரூபாயாக இருந்த வருமானம், 2024-2025ம் ஆண்டில் 374 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதுதவிர, பிரமாண பத்திரத்தில் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் முழு விவரங்களையும் அபிஷேக் மனு சிங்வி இணைத்துள்ளார். அதன்படி, வங்கி டெபாசிட், பங்குச் சந்தைகளில் செய்திருக்கும் முதலீடுகள், வாகனங்கள், நகைகள் உள்ளிட்ட விவரங்களையும் சேர்த்துள்ளார்.

அதில் மொத்தம் ரூ.2.40 கோடி மதிப்பில் நகைகள் அவரிடம் உள்ளன.அவரின் மனைவிக்கு ரூ.157.53 கோடி மதிப்பில் நகைகள் இருக்கின்றன. புதுடில்லியில் சிங்விக்கும், அவரின் மனைவிக்கும் மிக பெரிய பங்களாக்கள் உள்ளன. தமக்கு வங்கியில் ரூ.353.32 கோடி கடனும், மனைவிக்கு தனியாக ரூ.72.99 கோடி வங்கிக்கடனும் நிலுவையில் உள்ளன. இதே பிரமாண பத்திரத்தில் சுவாரசியமான அம்சமாக தமது வீட்டு உபயோக மின் சாதனங்கள், பர்னிச்சர்கள், கம்யூட்டர் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு ரூ.163 கோடி என சிங்வி தெரிவித்துள்ளார். தற்போது வரை தம் மீது எந்த கிரிமனல் வழக்குகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், ரூ.63 கோடி வருமான வரி பாக்கிகள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் சிங்வி தெரிவித்துள்ளார்.

Source link