வங்கதேசத்தில் நிலநடுக்கம்; கொல்கட்டா அதிர்ந்தது

கொல்கட்டா: வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், எல்லையில் உள்ள மேற்கு வங்கத்தின் கொல்கட்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் நேற்று மதியம் 1:22 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள சத்கிரா மாவட்டத்தை மையமாக கொண்டு, 10 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தின் தாக்கம் மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டா மற்றும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் எல்லையில் உள்ள தகி பகுதியிலும் உணரப்பட்டது.

இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியிருந்தது. 10 வினாடிகள் நீடித்த இந்த நில அதிர்வால் மேஜை, நாற்காலிகள் ஆடின. பீதியில் வீடு மற்றும் அலுவலகங்களை விட்டு அலறியடித்து வெளியேறிய மக்கள், தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

கொல்கட்டாவின் வடக்கு பகுதியில் கட்டடங்களில் விரிசல்கள் விழுந்தன. எனினும் உயிரிழப்போ, சொத்துக்களுக்கு பாதிப்போ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

Source link