வடக்கு டில்லியில் இன்று போக்குவரத்து மாற்றம்

புதுடில்லி: டில்லி மேம்பாட்டு ஆணையம் சார்பில், தீர்பூரில் இன்று நடக்கும் நிகழ்ச்சி காரணமாக, வடக்கு டில்லியில் இன்று காலை 7:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் போக்குவரத்து பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு:

டில்லி மேம்பாட்டு ஆணையம் சார்பில், தீர்பூர் மைதானத்தில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில், வீட்டுவசதித் திட்டங்கள் மற்றும் டில்லி மெட்ரோ ரயில் திட்டங்கள் துவக்கப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சியில், 25,000 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்று காலை 7:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை வடக்கு டில்லியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சாந்தி ஸ்வரூப் தியாகி மார்க், கேம்ப் சவுக் முதல் புராரி சவுக் வரை, ஷா ஆலம் பந்த் மார்க், சாந்தி ஸ்வரூப் தியாகி மார்க் டி–பாயின்ட் முதல் மஜ்லீஸ் பார்க் வரை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும். நிகழ்ச்சிக்கு அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.

போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ள நேரத்தில் ஹரிஹந்த் மார்க், சாந்தி ஸ்வரூப் தியாகி மார்க், ஷா ஆலம் பந்த் மார்க் மற்றும் அவுட்டர் ரிங் ரோடு ஆகியவற்றை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

கிங்ஸ்வே கேம்ப் சவுக்கில் இருந்து புராரி சவுக் நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை. புராரி மேம்பாலம் அல்லது முகுந்த்பூர் மேம்பாலத்தில் சென்று புராரி சவுக் மற்றும் முகுந்த்பூர் சவுக்கை அடையலாம்.

புட்டா – புராரி சாலையில் பயணிப்போர், புராரி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பண்ட் சாலையில் சென்று புராரி சவுக்கை அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link