சென்னை: வணிக சிலிண்டர் ஒதுக்கீட்டில், குறுந்தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு மாநில அரசுக்கு, தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ‘டான்ஸ்டியா’ தலைவர் வாசுதேவன் கூறியதாவது:
சிறு வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் வினியோகம் பெருமளவு குறைப்பால், தமிழகத்தில் இரும்பை பயன்படுத்தி, வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், ‘பேப்ரிகேஷன், கேஸ்டிங், ஹீட் ட்ரீமென்ட்’ போன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள குறு, சிறுதொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் முற்றிலுமாக முடங்கிஉள்ளன.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களை, 20 சதவீதம் கூடுதலாக ஒதுக்கீடு செய்து, மொத்தம் 50 சதவீதமாக்கியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன் வினியோக தேவையை மாநில அரசு நிர்ணயிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, வணிக சிலிண்டர் ஒதுக்கீட்டில், குறு, சிறு தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
சிலிண்டர் தட்டுப்பாட்டால், அதற்கு மாற்றாக மின்சாரத்தை பயன்படுத்தும் குறுந்தொழில்களுக்கு கூடுதலாக பயன்படுத்தும் அளவுக்கு, நிலை கட்டணம், உச்ச நேர மின் பயன்பாட்டு கட்டணம் ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
