வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரிவிதிப்பு, 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
சந்தித்ததில் மகிழ்ச்சி
இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்கள் இருதரப்பு உறவு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம்.
இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவை வர்த்தகம், எரிசக்தி, அணுசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறையில் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டன. இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்கோ ரூபியோவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையே எட்டப்பட்ட வரி குறைப்பு முடிவை வரவேற்றனர். ரூபியோவும், ஜெய்சங்கரும் குவாட் அமைப்பு மூலம் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சந்திப்பு
முன்னதாக, அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்டை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இது குறித்து புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஜெய்சங்கர் கூறியதாவது:
வெள்ளை மாளிகையில் அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்டை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா – அமெரிக்கா இடையே பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
