சென்னை: இப்படி ஒரு கருத்தை திரிஷா பதிவிடுவார் என தெரிந்திருந்தால் வருத்தம் தெரிவித்து இருக்க மாட்டேன். கரூர் பிரச்னையில் விஜய்க்கு ஏற்படாத பாதிப்பு திரிஷா உடன் சென்ற நிகழ்வால் ஏற்பட்டுள்ளது என இயக்குநர் பார்த்திபன் வெளியிட்ட புதிய வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.
விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் வீட்டில் அனுமதிக்க விஜய் மறுப்பதாகவும் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார். மறுபக்கம் விஜய் உடன் நடிகை திரிஷா ஒரே கலரில் உடை அணிந்துகொண்டு ஜோடியாக திருமணம் நிகழ்ச்சியில் பங்கேற்றது கடும் விமர்சத்தை கிளப்பியது. இந்த சூழலில் ஒரு விழாவில் திரிஷா பற்றி பேசுகையில், ‘குந்தவை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது’ என இயக்குநர் பார்த்திபன் தெரிவித்தார். இதற்கு திரிஷா கடும் கண்டனம் தெரிவித்தார். பிறகு தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பார்த்திபன் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
புதிய வீடியோ
அவர் வருத்தமே தெரிவித்திருக்க கூடாது என பலரும் இணையத்தில் பதிவிட்டனர். இந்நிலையில் திரிஷா குறித்து பேசி மீண்டும், ‘குந்தவை-மனதில் குந்த வை’ என்ற பெயரில் புதிய வீடியோ ஒன்றை பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்த பார்க்க வேண்டும். தப்பு செய்தவன் வருந்தி ஆக வேண்டும். அதே மாதிரி தான், நான் வருத்தம் தெரிவிக்கிறேன் ஒரு விதம். மன்னிப்பு கேட்கிறேன் என்பது இன்னொரு விஷயம். ஒரு நிகழ்ச்சியில் தவறு நடந்ததாக உணர்கிறேன். உண்மையில் அது தவறி தான் நடந்தது.
100% பொய்
நான் விஜய், அஜித் பற்றி பேசுகையில் ஒரு போட்டோ வந்தது. அதை பார்த்ததும் என்ன பேசுவதென தெரியமால் திகைத்துவிட்டேன்.
நான் திட்டமிட்டு அவர் போட்டோவை போட்டு பேச வேண்டுமென ஆசைப்பட்டேன் என சொல்வது 100 சதவீதம் பொய். அப்படி நான் யாரிடமும் அடிமையில்லை. நான் காசு வாங்கிக்கொண்டு, எந்த நிகழ்ச்சிக்கும் நான் செல்லவில்லை.
இதனை என் மரணம் வரைக்கும் நான் செய்ய போவதில்லை. காசு வாங்கி கொண்டு எந்த கட்சியிலும் சேர போவதும் இல்லை. காசுக்காக நான் எந்த தவறையும் செய்ய போவதில்லை.
அடி மனதில்…!
திரிஷா வீட்டிலேயே இருந்திருக்க வேண்டும் என பலரும் சொன்னார்கள். அரசியல் என்பது சாதாரண விஷயம் இல்லை. விஜய் பல தடைகளை கடந்து வந்து கொண்டு இருக்கிறார். கரூர் பிரச்னையில் கூட விஜய்க்கு விமர்சனங்கள் வந்தன. இந்த அளவுக்கு பாதிப்பு வரவில்லை. இவ்வளவு பாதிப்புக்கும் காரணமான பெண்மணி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பது எனது அடி மனதில் இருந்தது. ஆனால் அதை சொல்வதற்காக அந்த மேடைக்கு நான் செல்லவில்லை. இவங்க போட்டோவை போட்டு பேச வேண்டும் என்பது எனது லட்சியம் இல்லை.
ஆதங்கம்
குந்தவையை வீட்டிலேயே குந்த வைத்து இருந்திருக்கலாம் என நான் சொன்னது ஆதங்கம். சமுத்திரகனியும் மிகுந்த அன்பின் வெளிப்பாடாகத்தான் பேசினார்.
நான் பிரச்னைகளை எப்போதும் விரும்பாதவன். அந்த வீடியோவை டெலிட் செய்ய சொன்னேன். ஆனால் வேறு வழியில் ரிலீஸ் ஆகிவிட்டது.
நான் ஒரு மூன்றாவது மனுஷியை பற்றித்தான் பேசினேன். இந்த பிரச்னையில் 3 பேரை எடுத்துக்கொண்டால், முதலில் எனது அன்பு நண்பர் விஜய். அவரின் வளர்ச்சியை பார்த்து நான் சந்தோஷப்படுகிறேன். இரண்டாவது இடத்தில் அவருடைய மனைவி இருப்பார்கள்.
கஷ்டம்
கோர்ட் தீர்மானிக்கும் வரை அவர்கள் மனைவி தான். முக்கியமான ஸ்தானத்தில் இருக்கிறார். இந்த மூன்றாவது மனுஷி வீட்டில் இருந்து இருக்கலாம் என்று சொன்னேன். ஆனால் இதை பெண்களுக்கு எதிராக பேசியதாக கூறுகிறார்கள். அது எனக்கு ஒரு மாதிரி கஷ்டம் ஆகிவிட்டது. நான் வருத்தம் தெரிவித்தது ரொம்ப சின்சியராகத்தான் தெரிவித்திருந்தேன். இப்படி ஒரு ட்வீட் (திரிஷாவின் ட்வீட்) வரப்போகிறது என தெரிந்திருந்தால் நான் வருத்தம் தெரிவித்திருக்கவே மாட்டேன். அதை பார்த்த உடன் இன்றைக்கு ஒரு வீடியோவை இப்படி பண்ண வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
கண்டனம் ஏன்?
மூன்றாவது மனுஷியின் மூன்றாம் தரமான ட்வீட்டால்தான் இதை பேசுகிறேன். அவரை பற்றி பொதுவெளியில் எக்கச்சக்கமான விமர்சனங்கள் இருக்கின்றன. அதற்கெல்லாம் அவர் பதில் சொல்லவில்லை.
எனக்கு மட்டும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். நீங்கள் ஏன் வருத்தம் தெரிவித்தீர்கள் என என்னிடம் கண்டனம் தெரிவித்தவர்களும் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் என்னுடன் நிற்பவர்களுக்கு நன்றி.
நீங்கள் நன்மைக்கு பக்கத்தில் நிற்கவில்லை. உண்மைக்கு பக்கத்தில் நிற்கிறீர்கள். இதனால் உங்களை நான் பாராட்டுகிறேன். மேலும் அடுத்த வீடியோ வந்தாலும் வரலாம். இவ்வாறு பார்த்திபன் கூறி இருக்கிறார்.
