சென்னை: ‘கோவில் திருவிழாக்களை வருவாய் ஆதாரமாக மட்டும் பார்க்காமல், திருவிழாக்களில் சிறு வியாபாரிகளும் உள்நாட்டு பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்’ என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், வரும் மார்ச் 11 முதல் 13ம் தேதி வரை, மாசி திருவிழா நடக்கிறது.
அடிப்படை வசதி
இந்த விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு, குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை செய்யவும், தற்காலிக கடை களை முறைப்படுத்தக் கோரியும், அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என் பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், ‘கழிப்பறை, குடிநீர் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
‘ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், அவர்களின் பாதுகாப்புக்கு போதுமான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவர்’ என தெரிவிக்கப்பட்டது.
அறநிலையத் துறை தரப்பில், ‘கோவில் திருவிழாவில் தற்காலிக கடைகள் அமைப்பதற்கு கோரப்பட்ட டெண்டரில் ஒருவர் மட்டுமே பங்கேற்றுள்ளார். எனவே, மீண்டும் புதிதாக டெண்டர் கோர உள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி கூறியதாவது:
கோவில் திருவிழா என்பது சடங்கு மட்டுமல்ல. அது ஒரு கலாசார நிகழ்வு. இந்த மாதிரியான திருவிழாக்களின்போது, சிறிய வியாபாரிகள், நம் நாட்டின் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.
அதை விடுத்து, வெளிப்படைத்தன்மை என்ற பெயரில் அதிக விலைக்கு டெண்டர் கேட்டால், சாதாரண சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவர்.
எனவே, அதிக விலைக்கு டெண்டர் குறிப்பிடாமல், சிறு வியாபாரிகள் பங்கேற்கும் வகையில் டெண்டர் கோர வேண்டும். இல்லையென்றால், கோவில் தன் கலாசார மதிப்பை இழந்து விடும்.
கோவில் திருவிழாக்களை வருவாய் ஆதாரமாக மட்டும் பார்க்காமல், திருவிழாக்களில் உள்நாட்டு பொருட்களை விற்பனை செய்ய, சிறு வியாபாரிகள், பெண்கள், பழங்குடியின சமூகத்தினரை ஹிந்து அறநிலையத் துறை ஊக்குவிக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு
கோட்டை மாரியம்மன் கோவில் சொத்துக்கள் ஆக் கிரமிப்பில் உள்ளனவா, இல்லையா என்பதை கண்டறிய வேண்டும். அவ்வாறு ஆக்கிரமிப்பில் இருந்தால், அவற்றை மீட்க வேண்டும்.
கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில், குடிநீர், போதுமான கழிப்பறை வசதிகளை உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
