புதுடில்லி: ஜி.சி.சி., எனும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுடன், தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சை துவங்குவதற்கான வழிகாட்டு விதிகள், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், கையெழுத்தாகியுள்ளன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் நோக்கங்கள், அதன் வரம்புகள் ஆகியவற்றை இவ்விதிகள் விளக்குகின்றன.
இந்தியாவுக்கும், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுக்கும் இடையே 2006, 2008 ஆண்டு என இரு கட்ட பேச்சுகள் நடைபெற்றன. அனைத்து வகையான பொருளாதார அமைப்புகள் மற்றும் நாடுகளுடனான பேச்சுகளை, ஜி.சி.சி., நிறுத்தி வைத்ததை அடுத்து, மூன்றாவது சுற்று பேச்சு நடத்தப்படவில்லை. தற்போது, இந்தியாவுடனான பேச்சு தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் பியுஷ் கோயல் பேசுகையில், “ஆறு வளைகுடா நாடுகளை உள்ளடக்கிய ஜி.சி.சி.,க்கும், இந்தியாவுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிப்பதற்கு இந்த ஒப்பந்தம் மிகவும் பயனளிக்கும். ஜி.சி.சி., நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் வசித்து, பணியாற்றி வருகின்றனர்” என்றார்.
இந்தியா, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றை சவுதி அரேபியா, கத்தார் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. முத்து, விலை மதிப்புமிக்க மற்றும் விலை குறைந்த ரத்தின கற்கள், உலோகங்கள், கவரிங் நகைகள், மின் இயந்திரங்கள், இரும்பு மற்றும் ஸ்டீல், ரசாயனங்கள் ஆகியவற்றை இந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
