கோவை: “மத வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள், சிறுபான்மையினரை மட்டும் கட்டுப்படுத்துவதில்லை. அதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்,” என ஹிந்து மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது.
அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: ஜாதி, மத மோதல் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வேட்பாளர்கள் பேசக்கூடாது; மத வழிபாட்டுத் தலங்களில் பிரசாரம் செய்யக்கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஆனால், இந்த விதிமுறைகள், சிறுபான்மையினரான இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை கட்டுப்படுத்துவதில்லை.
தமிழகத்தில், ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், அரசியல் கொடி கட்டி பறக்கிறது. இப்தார் விருந்து என்ற பெயரில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இந்நிகழ்ச்சியை நடத்துகின்றன. அரசியல் கட்சிகள் ஏன் இப்தார் விருந்து நடத்த வேண்டும்? ‘நாங்கள் மட்டுமே முஸ்லிம்களுக்கு பாதுகாவலர்கள். எங்களுக்கு வாக்களியுங்கள்’ என பேசி, மத அடிப்படையில் ஓட்டு சேகரிக்கப்படுகிறது.
இதேபோல இஸ்லாமிய ஜமாத்துகள், மசூதிகளில் தொழுகை முடிந்து வருவோரிடம், அரசியல் கட்சிகள் ஓட்டு சேகரிக்கின்றன. அதற்கு தடை விதிக்க வேண்டும். கிறிஸ்தவ சபைகள், சர்ச்சுகளில், ‘இந்த கட்சியை ஆதரிக்க வேண்டும், அந்த கட்சியை தோற்கடிக்க வேண்டும்’ என பிரார்த்தனை கூட்டங்களில் பேசுகின்றனர். அதற்கும் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
