திருநெல்வேலி: ‘சென்னை காயிதே மில்லத் கல்லுாரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரியும் காஜா கனி, மனித நேய மக்கள் கட்சியில் இணைந்து அரசியல் செய்வது சரியா?’ என, கல்லுாரி நிர்வாகம், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி சார்பில், கூட்டணி பேச்சு நேற்று முன்தினம் நடந்தது. இதில், கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மனிதநேய மக்கள் கட்சியின் மற்றொரு அமைப்பான, த.மு.மு.க., பொதுச்செயலராக இருப்பவர் காஜா கனி, 55. இவர், சென்னை, மேடவாக்கத்தில் இயங்கும் காயிதே மில்லத் கல்லுாரியில் தமிழ்த்துறை தலைவராகவும், பேராசிரியராகவும் உள்ளார்.
அரசு உதவி பெறும் இக்கல்லுாரியில், அரசு சம்பளம் பெற்றுக்கொண்டே அரசியல் கட்சியில் மாநில பொறுப்பில் இருப்பதும், அரசியல் கூட்டணி பேச்சில் பங்கேற்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக டிரஸ்ட் பொதுச்செயலர் தாவூத் மியாகான், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘கூட்டணி பேச்சில் பங்கேற்றவர்களில் அரசு உதவி பெறும் காயிதே மில்லத் ஆண்கள் கல்லுாரி பேராசிரியர் பங்கேற்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். அரசு உதவி பெறும், அரசு ஊதியம் பெறும் பேராசிரியர், அரசியல் கட்சி சார்பில் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்வது சட்டத்திற்கு முரணானதாகும்.
‘பல்வேறு தேச விரோத குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டவருடன் முதல்வர் தலைமையில் பேச்சு நடப்பது, நாட்டிற்கே வழிகாட்டியாக உள்ள தி.மு.க., இதனை நடத்துவது ஏற்புடையதாக இல்லை. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்துறை தலைவர் காஜா கனி, அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பதை சுட்டிக்காட்டி, கல்லுாரி நிர்வாகமும் அவரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏற்கனவே, கல்வித்துறையில் இதுகுறித்து சர்ச்சை ஏற்பட்டதும், சம்பந்தப்பட்ட பேராசிரியர் காஜா கனி, உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் மூலம் நிலைமையை சரிகட்டி வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து, பேராசிரியர் காஜா கனியிடம் விளக்கம் கேட்க முயன்ற போது, அவர் பதில் அளிக்கவில்லை.
