வாஷிங்டன்:ஈரான் உடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சூழலில், அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜை உடனடியாக பதவி விலகும்படி, அந்நாட்டின் ராணுவ அமைச்சர் பீட் ஹெக்ஸெத் நேற்று முன்தினம் கேட்டுக் கொண்டார்.
இதன்படி, ராண்டி ஜார்ஜ் பதவி விலகினார். புதிய தலைமை தளபதியாக, துணை தளபதி ஜெனரல் கிறிஸ்டோபர் லானீவ் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு உள்ளார். ஈரானுடனான போரில், அமெரிக்கா சில இடத்தில் இழப்புகளை சந்தித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2023ல், ராணுவ தலைமை தளபதியாக பதவியேற்ற ராண்டி ஜார்ஜ், திடீரென பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
