வாஷிங்டன்: அமெரிக்கா சென்ற நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்து பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, அடுத்த மாதம் தன் இந்திய பயணத்தை உறுதி செய்தார்.
வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி அமெரிக்காவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது ராணுவ அதிகாரிகள், வர்த்த துறை அதிகாரிகளை சந்தித்து, அந்த துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினார்.
இதையடுத்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை நேற்று முன்தினம் விக்ரம் மிஸ்ரி சந்தித்தார். இந்த சந்திப்பில், வர்த்தகம், அரிய வகை கனிமங்கள், பாதுகாப்பு துறை மற்றும் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான, ‘குவாட்’ உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். இதன் தொடர்ச்சியாக மார்கோ ரூபியோ அடுத்த மாதம் இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேலும், மிஸ்ரி, அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் கிறிஸ்டோபர் லாண்டோ மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் அலிசன் ஹூக்கர் ஆகியோருடனும் தனித்தனியாக சந்தித்து பேச்சு நடத்தினார்.
இந்த சந்திப்புகளில், இருதரப்பு முன்னுரிமைகள், உலகளாவிய நிலைமைகள், குறிப்பாக மேற்கு ஆசியா தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
