வாஷிங்டன்: ”அரியவகை கனிமங்கள் சில குறிப்பிட்ட நாடுகளிடம் மட்டுமே குவிந்து கிடப்பது உலகத்துக்கே ஆபத்து,” என நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
செமி-கண்டக்டர், நவீன ராணுவத் தளவாடங்கள் தயாரிக்க அரியவகை கனிமங்கள் அவசியம். இதற்கான சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வாஷிங்டனில் உலக நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.
இதில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
அரியவகை கனிமங்கள் உலகம் முழுதும் பரவலாக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட சில நாடுகளிடம் மட்டுமே அவை குவிந்து கிடப்பது உலகத்துக்கே ஆபத்தாகிவிடும்.
தட்டுப்பாடுகள் ஏற்படுவதை தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைவது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘தேசிய அரியவகை கனிமங்கள் திட்டம்’ வாயிலாக அத்துறையில் நம் நாடு தற்சார்பு நிலையை எட்டி வருவதையும் இந்த கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.
இந்த கூட்டத்திற்கு முன்பாக, கனடா வெளியுறவு துறை அமைச்சர் அனிதா ஆனந்த், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஜெய்சங்கர் பேசினார்.
