வாஷிங்டன்: ஈரானுக்கு படைகளை அனுப்பும் திட்டம் ஏதுமில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; நான் எங்கும் (ஈரான்) படைகளை அனுப்பப் போவதில்லை. ஒருவேளை நான் அப்படிச் செய்வதாக இருந்தாலும், அதை உங்களிடம் சொல்ல மாட்டேன். கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அமெரிக்க பங்குச்சந்தையான டவ் ஜோன்ஸ் 50,000 புள்ளிகளைத் தொட்டது. எனது பதவிக்காலத்தில் இது நடக்காது என்றும் பலர் சொன்னார்கள். ஆனால் அது 50,000-ஐத் தொட்டுவிட்டது. நான்கு ஆண்டுகளில் செய்ய வேண்டியதை நாம் ஓராண்டிலேயே செய்துவிட்டோம். எனவே, அனைத்தும் முடிந்தது. எல்லாம் சிறப்பாகச் சென்று கொண்டிருந்தது. பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. பெட்ரோல், டீசல் விலைகள் குறைவாக இருந்தன. எல்லாமே சிறப்பாக சென்று கொண்டிருக்கும் போது தான், ஈரானில் நடப்பதைக் கவனித்தேன். அங்கு நடப்பதில் நான் தலையிட விருப்பமில்லை என்றாலும், அதைச் செய்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, கச்சா எண்ணெய் விலை இதைவிட அதிகமாக இருக்கும் என்று நினைத்தேன். போர் முடிவடையும் போது, உலகம் மிகவும் பாதுகாப்பானதாக மாறும். என்னுடைய செயல்பாட்டில் ஜப்பான் பிரதமர் உடன்படுகிறார். ஈரான் செய்தது பயங்கரமானது என்று அனைத்து நாடுகளுமே நினைக்கின்றன. மேற்காசியாவுக்கு மட்டுமின்றி உலகத்திற்கே ஈரான் பெரிய அச்சுறுத்தல். இதில் அனைவரும் என்னுடன் உடன்படுகிறார்கள். எனவே, அந்தத் தீயை அணைக்கவே நான் விரும்பினேன், எனக் கூறினார்.
