வாஷிங்டன்: ”கடந்தாண்டு நான் பதவியேற்றபோது அமெரிக்காவின் பொருளாதாரம் செத்த நிலையில் இருந்தது; தற்போது பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் அமெரிக்காவுக்கு பொற்காலமாக உள்ளது,” என, அதிபர் டொனால்டு டிரம்ப் பார்லிமென்டில் பேசினார்.
அமெரிக்க பார்லிமென்டில், ஜன., அல்லது பிப்., மாதத்தில், கூட்டுக் கூட்டத்தில் அதிபர் உரையாற்றுவார். அதன்படி, நேற்று நடந்த கூட்டுக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பல விஷயங்களை பேசினார்.
அவருடைய பேச்சின் முக்கிய அம்சங்கள்:
கடந்தாண்டு நான் பதவியேற்றபோது, அமெரிக்காவின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்தது. தற்போது ஓராண்டில், 1,636 லட்சம் கோடி முதலீடுகளை பெற்றுள்ளோம்
ஓராண்டில் யாரும் எதிர்பாராத முன்னேற்றங்களை கண்டுள்ளோம். இது ஒரு யுகத்துக்கான மாற்றம்
தற்போது அமெரிக்காவுக்கு பொற்காலம். இந்த ஓராண்டில் பல சாதனைகளை படைத்து உள்ளோம்
நான் ஆட்சிக்கு வந்தால், பொருளாதாரம் பாதிக்கப்படும் என பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்றவர்கள் கூறினர். ஆனால், 22 பொருளாதார நிபுணர்களால் செய்ய முடியாதவற்றை செய்துள்ளேன்
உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்ததற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது துரதிர்ஷட வசமானது
இந்த வரிகளால் நாட்டின் வருவாய் பெருகியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் வருமான வரி விதிப்பில் இருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்கும்
கடந்த, 10 மாதங்களில் மட்டும், எட்டு போர்களை நிறுத்தியுள்ளேன். ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம், ஒன்பதாவதாக இருக்கும்
உலகின் ‘நம்பர் 1’ பயங்கரவாத நாடாக உள்ள மேற்காசிய நாடான ஈரான், அணு ஆயுதம் தயாரிப்பதை அனுமதிக்க மாட்டோம். இதை தடுக்கவே, ஈரான் மீது கடந்தாண்டு தாக்குதல் நடத்தினோம்.
