விக்கிரவாண்டி: தப்பித்தவறி தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்தால், 6 மாதத்தில் எச். ராஜா அல்லது அண்ணாமலையை பாஜ

விக்கிரவாண்டி: தப்பித்தவறி தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்தால், 6 மாதத்தில் எச். ராஜா அல்லது அண்ணாமலையை பாஜ முதல்வராக்கும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வி.சி.க., தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்து பேசியதாவது :

இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டால் அது மோடிக்கும், அமித்ஷாவுக்கும் ஓட்டுப் போட்டதாக தான் அர்த்தம். இரட்டை இல்லை எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த இரட்டை இலை. மோடி, அமித்ஷாவிடம் அடமானம் வைக்கப்பட்ட இரட்டை இலை. இரட்டை இலையில் ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால், அது பாஜ வளர்ச்சி பெறுவதற்கு வாய்ப்பு அளித்து விடும்.

பாஜ உடன் கூட்டணி அமைப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்தில் தப்பித்தவறி அதிமுக ஆட்சிக்கு வந்தால், பாஜவை சேர்ந்தவர் தான் முதல்வராக அமர்வார். 6 மாதத்தில் ஆட்சியை கலைத்து ஆட்டத்தை கலைத்து விடுவார். எச்.ராஜா அல்லது அண்ணாமலையை முதல்வர் ஆக்கினாலும் ஆக்குவார்கள். அண்ணாமலைக்கு போட்டியிட வாய்ப்பு தரவில்லை என்பது வேறு விஷயம். பாஜ எப்படி ஆட்டத்தை ஆடுவார்கள் என தெரியாது.

அனைத்து மாநிலங்களிலும் ஆடுகிற ஆட்டம் வேறு மாதிரியாக இருக்கும். தேர்தலுக்கு பிறகு வேறுமாதிரியாக இருக்கும். அதிமுக 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று விட்டால் தமிழக அரசியலையே பாஜ புரட்டி போட்டு விடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

நான் அதிமுகவினருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் நினைப்பது போல் ஜெயலலிதா தலைமையில் இருந்த அதிமுக இல்லை. எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இல்லை. மோடி கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுக. பாஜ கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுக. நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜவும் வளர்ச்சி பெறுவதற்கு வாய்ப்பு.

புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் 1 தொகுதியில் நிற்கிறது. அதிமுக நம்மை விட ஒரு கூடுதல் தொகுதியில் தான் கூடுதலாக நிற்கிறது. பாஜ அதிக இடங்களில் நிற்கிறது. பாஜ உடன் சேர்ந்தால் அதிமுக எப்படி கரையும் என்பதற்கு அதிமுக புதுச்சேரியில் போட்டியிட்ட தொகுதிகளை வைத்து அறியலாம். தமிழகத்தில் அதிமுகவை பலவீனப்படுத்துவது திமுகவோ, விசிகவோ அல்ல. தமிழகத்தில் அதிமுகவை வீழ்த்தப்போவது பாஜ தான். அதிமுகவினர் தங்களது ஓட்டுகளை வீணாக்க வேண்டாம்.

‘விசில்’ அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்க

பாஜ தமிழகத்தில் வளர்ந்துவிடக் கூடாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த கட்சிக்கு ஆதரவாக இபிஎஸ் செயல்பட்டு வருகிறார்.

அதேபோல், விசில் (த.வெ.க.,) பக்கம் ஓட்டுகள் சிதறிவிடக் கூடாது. சட்டசபை மற்றும் லோக்சபாவில் விசில் அடிப்பதற்கு அனுமதி கிடையாது. விசில் அடிப்பவர்களை , சினிமா தியேட்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் விசில் அடிப்பதற்கு ஏற்ற இடம் சினிமா தியேட்டர்தான். அவர்களுக்கு சட்டசபையில் வேலை கிடையாது.

திமுகவின் ஆதரவால் மட்டுமே அரசியல் அங்கீகாரம்

திமுக கூட்டணியில் விசிக தொடர்ந்து நீடிப்பதற்கு, கொள்கை பிடிப்புதான் காரணம். கடந்த சட்டசபை தேர்தலில் 4 இடங்களில் விசிக வெற்றி பெற்றது. அத்துடன், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் விசிக இரு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் தான், நமக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற பெருமை கிடைத்தது.

இந்தியாவில் அம்பேத்கர் கொள்கையை பின்பற்றும் நான்கு கட்சிகளுக்கு மட்டுமே அரசியல் கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள விசிக வும் ஒன்று. இதற்கு அடித்தளமிட்டது திமுக தான். இதற்கு உறுதுணையாக இருந்த திமுகவிற்கு நாமும் பக்கபலமாக இருக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Source link