வியாஸன் vy********@***il.com
தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,விற்கு 10 இடங்கள் என்பது, அரசியல் வட்டாரத்தில் பலரையும் வியப்படைய வைத்திருக்கும் ஓர் அதிர்ச்சியான வெகுமதி.
கடந்த 2011ல், 29 இடங்களை வென்று எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் அமர்ந்தது அக்கட்சியின் ஒரு பொற்காலம். ஆனால், அதன் பின் வந்த தேர்தல்களில் அக்கட்சியின் ஓட்டு வங்கி கடும் சரிவை சந்தித்து, 2021 சட்டசபை தேர்தலில், 0.43 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது.
2023ல், விஜயகாந்த் மறைவிற்கு பின், கட்சி காணாமல் போகும் என்றே அனைவரும் கருதினர். ஆனால், கட்சி தலைமையை எடுத்துக்கொண்ட பிரேமலதா மிகவும் திறமையாக செயல்பட்டுள்ளார். கட்சியை ஒருங்கிணைத்து வைத்தது மட்டுமல்லாமல், 2024, 2026 என இரு தேர்தல்களிலும் கூட்டணிகளை சாதுர்யமாக அமைத்துள்ளார்.
கடந்த 2021ல் அ.ம.மு.க.,வுடன் வைத்த தவறான கூட்டணியால் வெறும் 0.43 சதவீத ஓட்டுகளை தான் பெற முடிந்தது என்பதை உணர்ந்து, 2024ல் பெரிய கட்சியான அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்ததன் வாயிலாக 2.61 சதவீத ஓட்டுகளை பெற்றார்.
இது, 2016ல் மக்கள் நல கூட்டணியின் தலைமை கட்சியாக தே.மு.தி.க., பெற்ற 2.39 சதவீதத்தை விட அதிகம். அதுவரை சபாஷ். ஆனால், கூட்டணி பலத்தால் மட்டுமே தே.மு.தி.க.,வின் ஓட்டு விகிதம் அதிகரிக்கிறதா என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது.
இந்த தேர்தலில், கடந்த ஆண்டு முழுதும், தி.மு.க., பற்றியும் அதன் அமைச்சர்கள் பற்றியும், ஏன் முதல்வர் பற்றியும் கூட, பிரேமலதா மேடைகளில் உதிர்த்த முத்துக்கள் சமூக வலைதளங்கள் முழுதும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன.
இந்த அதிர்வேட்டுகளை கணக்கில் வைத்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க., இணையும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தே.மு.தி.க., எந்த பக்கமும் போக தயாராக தான் இருந்தது. தி.மு.க.,வின் கவனத்தை ஈர்க்கவே அவர்களை எதிர்த்தும் பேசியிருக்கலாம். அதன்படியே தி.மு.க.,வும் சிக்கிக்கொண்டது.
அதிருப்தி ஏராளம்
தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வருகையால்…
* தே.மு.தி.க.,வை விட அதிக ஓட்டு வங்கி உள்ள வி.சி., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது மட்டும் அல்லாமல்; கூட்டணி கட்சிகளிடம், தே.மு.தி.க.,விற்கும் ஒற்றை இலக்க தொகுதிகள் தான் என, உண்மையை மறைத்து தி.மு.க., பேச்சு நடத்தியது கடும் அதிருப்தியை விதைத்திருக்கிறது
* தே.மு.தி.க., தங்களின் முரசு சின்னத்திலேயே போட்டியிட ஒப்பந்தம் ஆகியிருப்பதும்; உதயசூரியனில் போட்டியிட கட்டாயப்படுத்தப்படும் ம.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வுடன் நெடுங்காலமாக பயணிக்கும் சிறு கட்சிகள் மத்தியில் அதிருப்தியை கிளப்பியிருக்கிறது
* சட்டசபை உறுப்பினர்களே இல்லாத தே.மு.தி.க.விற்கு, தி.மு.க., தனது பலத்தை பயன்படுத்தி ராஜ்யசபா சீட் கொடுத்திருப்பது அரசியல் சமரசத்தின் உச்சம், அதிகப்படியானது என்பதே கூட்டணி கட்சிகள் மத்தியில் நிலவும் கருத்து.
இப்படி, ஏராளமான அதிருப்திகள் கூட்டணி கட்சிகள் மத்தியில் மட்டும் அல்ல, தி.மு.க.,வினர் மத்தியிலும் உள்ளது. அவர்கள் வேலை செய்யாமல் போனால், தே.மு.தி.க.,வின் வெற்றி மட்டும் அல்ல, தி.மு.க.,வின் கூட்டணி வெற்றியையும் பாதிக்கும்.
கேப்டன் மேஜிக்
விஜயகாந்தின் உருவப்படத்தை வைத்துக்கொண்டு பிரேமலதாவும், அவரது மகன் விஜய பிரபாகரனும் மக்களிடையே ஓட்டு கேட்கலாம். ஆனால், விஜயகாந்தின் அந்தத் தனித்துவமான கம்பீரமும், ஏழை எளிய மக்கள் மீதான அவரது நிபந்தனையற்ற அன்பும் தற்போதுள்ள தலைமையிடம் இல்லை என்பது, தொண்டர்களின் வெளிப்படையான வருத்தம்.
கேப்டன் மேஜிக் என்பது ஒரு தனி மனிதனின் ஈர்ப்பு; அது வாரிசுகளுக்கு அப்படியே கடத்தப்படாது என்பதற்கு தே.மு.தி.க.,வின் கடந்தகால தோல்விகளே சாட்சி. மக்களிடம் இழந்த செல்வாக்கை மீட்க ‘கேப்டன்’ என்ற பெயரைப் பயன்படுத்துவது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது சந்தேகமே. கடந்த தேர்தலில் தே.மு.தி.க.,விற்கு அதிகரித்த ஓட்டு வங்கியுமே அ.தி.மு.க.,வுடையது தானோ என்று எண்ண இடம் இருக்கிறது.
இந்த சூழலில், தே.மு.தி.க.,விற்கு அதிக இடங்களை ஒதுக்கி, பழைய தோழர்களைப் பகைத்துக் கொள்வது ‘தேன் எடுக்கப்போய் கொட்டு வாங்கி வந்தது’ போல ஆகிவிடக்கூடும்.
தே.மு.தி.க.,வுடன் பேச்சு வார்த்தை ஆரம்பித்த போது டில்லி பத்திரிகையாளர் ஒருவர் கிண்டலாக சொன்னது, ‘இப்போதைக்கு தே.மு.தி.க., ஒரு முள்கிரீடம். அதை தலையில் சூட்டிக்கொண்டாலும் வலியே. ஆனால், இவர்கள் உட்காருமிடத்தில் வைத்துக் கொள்ளப் போகிறார்கள். இது சரியான தேர்தல் ராஜதந்திரம் அல்ல’.
தமிழக அரசியலில் ‘தனி வழி’ கண்ட கேப்டனின் கட்சி, இன்று ‘தி.மு.க.,வின் நிழலில்’ தஞ்சம் புகுந்திருப்பது, ஒரு விதத்தில் கேப்டன் மேஜிக் இன்னும் இருக்கிறதா? அதையும் தாண்டி தே.மு.தி.க.,விற்கு செல்வாக்கு இருக்கிறதா? என்பதை தெளிவாக காட்டிவிடும்.
த.வெ.க., விஜயும் ஓட்டுகளை பிரிப்பதால், மிக சவாலான, நெருக்கமான போட்டியுள்ள தேர்தலாக இது அமையும் என்பது தி.மு.க., கணக்கு. அதில், 0.43 சதவீதம் கூட உதவும். ஆனால், அதற்கு தி.மு.க., கொடுத்துள்ள விலை மிக மிக அதிகம். அந்த 0.43 சதவீதம் விஜயகாந்த் அபிமான ஓட்டுகளும் இப்போது இல்லை என்று தான் தோன்றுகிறது.
