விமான ஓடுதளத்தின் கீழ் உலகின் முதல் சுரங்கப்பாதை! ஹைதராபாதில் அமைகிறது

ஹைதராபாத்: “ஹைதராபாதின் பேகம்பட் விமான நிலைய ஓடுதளத்தின் அடியில், உலகின் முதல் நிலத்தடி போக்குவரத்து சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது,” என, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, சட்டசபையின் கேள்வி நேரத்தின் போது ரேவந்த் ரெட்டி நேற்று பேசியதாவது:

டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற முக்கிய பெருநகரங்கள் காற்று மாசு, மோசமான வடிகால் அமைப்புகள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி, நாள்தோறும் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

அந்த நகரங்களை ஒப்பிடுகையில், தெலுங்கானாவின் ஹைதராபாத் சிறந்து விளங்குகிறது. இருப்பினும், உரிய சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்காலத்தில் ஹைதராபாத் நகரமும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதைத் தடுக்க ஹைதராபாதின் பேகம்பட் விமான நிலைய ஓடுதளத்தின் கீழ் நிலத்தடி போக்குவரத்து சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

உலகில் எங்கும் விமான ஓடுதளத்தின் கீழ், வாகன போக்குவரத்துக்கான சுரங்கப் பாதை அமைக்கப்படவில்லை. இந்திய விமான நிலைய ஆணையத்திடம் இருந்து இதற்கான அனுமதியை பெற்றுள்ளோம். மத்திய அரசின் சம்மதத்துடன் சுரங்கப் பாதைக்கான பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. இதன் வாயிலாக, மாநிலத்தின் வடக்கு பகுதியில் இருந்து நகரத்துக்குள் வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

ஹைதராபாத் நகரில், 1937ல் துவங்கப்பட்ட பேகம்பட் விமான நிலையம், தற்போது ராணுவ பயன்பாட்டில் உள்ளது. பயணியர் விமானம் எதுவும் இங்கிருந்து இயக்கப்படவில்லை.

Source link