விருதுநகர் : ‘எவ்வளவு வருத்தங்கள் இருந்தாலும் அவற்றை தள்ளி வைத்துவிட்டு, திமுக கூட்டணி கட்சிகளை முழு மனதுடன் ஆதரித்து நிற்க வேண்டிய நேரத்தில் உள்ளோம்,’ என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசினார்.
விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகருக்கு ஆதரவு அளிப்பதற்கான காங் செயல்வீரர்கள் கூட்டம், விருதுநகரில் நடந்தது.
இதில் மாணிக்கம் தாகூர் பேசியதாவது: கடந்த ஐந்தாண்டுகளில் காங்கிரசார் நடத்தப்பட்ட விதத்தால், மனதளவில் வருத்தங்கள் உள்ளன. இவை ஒருபக்கம் இருந்தாலும், காங்., தலைமை முடிவுக்கு கட்டுப்பட்டு கூட்டணியில் உள்ள பஞ்சாயத்துக்கள், வேதனைகளை தள்ளிவைக்க முடிவெடுத்தோம். வருத்தங்களை தள்ளி வைத்துவிட்டு திமுக கூட்டணி கட்சிகளை முழு மனதுடன் ஆதரித்து நிற்க வேண்டிய நேரத்தில் உள்ளோம்.
தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரின் வெற்றிக்காக காங் நிர்வாகிகள் உழைக்க வேண்டும். இதை விஜயகாந்த் மகனுக்கு கிடைக்கும் வெற்றியாக பார்க்காமல் காங் பாரம்பரியத்தை சேர்ந்த அழகர்சாமியின் பேரனுக்கு கிடைக்கும் வெற்றியாக பார்க்க வேண்டும். மரியாதை கிடைத்தால் அதை இரு மடங்காக திருப்பி கொடுப்பவர்கள் காங்கிரசார். அவர்களின் தன்மானத்தை யார் அவமதித்தாலும் தட்டிக்கேட்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
