விருதுநகரில் பெண் ஒருவர் பியூட்டி பார்லர் மற்றும் துணி தைக்கும் கடை நடத்தி வந்தார். இவரது கணவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த பெண்ணிடம், விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் சுந்தர்ராஜ் என்பவர் பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில், திருமணம் செய்வதாகக்கூறி ஏமாற்றி அந்த பெண்ணுடன் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளார். அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளார். அந்த வீடியோவைக் காட்டி பலமுறை மிரட்டி ரூ.80 லட்சம் வரை பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன், அந்த பெண்ணின் மகளை மருத்துவருக்கு படிக்க வைப்பதாகவும் கூறி பணம் பறித்துள்ளார்.

பணத்தை பலமுறை கேட்டும் சுந்தர்ராஜ் தர மறுத்ததுடன், அந்த வீடியோவை உறவினர்களுக்கு அனுப்புவதுடன், சமூக வலைதளங்களில் பரவ விட்டுவிடுவதாகவும் கூறி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனையடுத்து அந்த பெண், விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் 6 பிரிவுகளின் கீழ் சுந்தர்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
