இத்தலத்தில் இருக்கும் மூன்று கை, மூன்று காலுடன் காட்சி தரும் ‘சுர தேவருக்கு’ மிளகு சார்த்தி வழிபட்டால் நாள்பட்ட காய்ச்சல், தலைவலி, தோல் நோய்கள் குணமாகும். அதைப்போல் தலத்தின் தீர்த்தத்திலிருக்கும் மீன்களுக்கு, உணவளித்தால் பூர்வீக பாவ சாபதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
இத்திருத்தலம் கி.பி.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இத்திருக்கோயிலுக்கு மூவேந்தர்களும், திருமலை நாயக்கரும் திருப்பணி செய்துள்ளனர். திருமலை நாயக்கர் காலத்தில் உருவான மூலிகை ஓவியங்கள் இன்றும் அழியாமல் பல கதைகளைச் சொல்லுகின்றன. இத்திருக்கோயிலில் கொடி மரத்தின் முன்னர் இருக்கும் ஆமைக் கல் 7 அடி உயரத்தில் இருப்பது சிறப்பு.

மேலும் இத்திருக்கோயிலில் மூலவர் சந்நிதியின் மேற்கூரையில் ‘வாஸ்துபுருஷரும் 27 நட்சத்திரங்களும்’ இருப்பது தனிச்சிறப்பு. அதுபோல இறைவி சிவகாமி அம்மன் சந்நிதிக்கு முன்னே உள்ள மேற்கூரையில் ‘ஸ்ரீ சக்கரமும் 12 ராசிகளும்’ காட்சி தருகின்றன. இத்திருக்கோயிலில் பங்குனி மாதத்தின் முதல் 3 நாள்களிலும், புரட்டாசி வளர்பிறை பிரதோஷத்திலும் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் கருவறையில் விழுவதால், சூரியனே வைத்தியநாதரைப் பூஜிப்பதாக ஐதீகம் நிலவுகிறது.
இங்குள்ள அம்பாளை 7 அமாவாசைகள் விரதமிருந்து வழிபட்டால், குழந்தையில்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வரவு செலவு கணக்குகளில் பிரச்னை இருப்பவர்கள், இக்கோயிலுக்கு வந்து ‘மிருத்யுஞ்சய ஹோமம்’ செய்தால் நற்பலன்கள் உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள்.
