சு ங்கச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களை நிர்வகிக்கும் மற்றும் பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ளும், ‘இன்னோவிஷன்’ நிறுவனத்தின் ஐ.பி.ஓ., நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த ஐ.பி.ஓ.,வுக்கு நிறுவன முதலீட்டாளர்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இறுதி நாளில் மட்டும், 2 மடங்கு பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.
ஐ.பி.ஓ., காலத்தின் துவக்கத்தில் இதற்கு முதலீட்டாளர்களிடையே வரவேற்பு குறைவாகவே இருந்தது. இதை சரிசெய்ய இந்நிறுவனம் இரண்டு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. முதலாவதாக, ஐ.பி.ஓ., முடிவடையும் தேதியை மார்ச் 12ல் இருந்து 17ம் தேதிக்கு நீட்டித்தது. இரண்டாவதாக, பங்கின் விலை வரம்பை முன்பு இருந்த ரூ.521-548 என்பதிலிருந்து ரூ.494-519 ஆக குறைத்தது.
இதனால் ஈர்க்கப்பட்ட, தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள், வெளியிடப்பட்ட பங்கு அளவை விட அதிகமாக 12.78 மடங்கும், நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் 6 மடங்கும், சிறு முதலீட்டாளர்கள் 0.43 மடங்கும் அதிகமாக பங்குகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
