பாங்காக்: ஆசிய வில்வித்தையில் காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா, பைனலுக்கு முன்னேறியது.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஆசிய வில்வித்தை ‘ஸ்டேஜ் 1’ தொடர் நடக்கிறது. காம்பவுண்டு பிரிவில் கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் ரஜத் சவுகான் சிகிதா ஜோடி பங்கேற்றது. தகுதிச்சுற்றில் ‘நம்பர்-1’ இடம் பெற்ற இந்திய ஜோடி, நேரடியாக காலிறுதியில் பங்கேற்றது.
இதில் 159-155 என்ற கணக்கில் சீன தைபே அணியை சாய்த்து, அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதின. ரஜத் சவுகான் தொடர்ந்து துல்லியமாக இலக்குகளை தாக்க, இந்திய ஜோடி 157-153 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. இதில், இன்று மலேசியாவை எதிர்கொள்கிறது.
பெண்களுக்கான ரிகர்வ் பிரிவு கலப்பு அணிகள் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் தேவாங், ருமா ஜோடி முதலிடம் பிடித்தது. நேரடியாக காலிறுதியில் களமிறங்கியது. இதில், தரவரிசையில் 9வது இடம் பிடித்த வியட்நாம் ஜோடியிடம் 0-6 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
