விழுப்புரம்: செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேரை விடுதலை

விழுப்புரம்: செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தினால் அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா, பூத்துறை கிராமத்தில் அரசு செம்மண் குவாரி உள்ளது. இங்கு, கடந்த 2006–2011-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின்போது தனியாரிடம் ஒப்பந்தம் விட்டு, விதிமுறைகளை மீறி மண் எடுத்ததில் அரசுக்கு 28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.அப்போது அமைச்சராக இருந்த பொன்முடியின் ஆதரவில், குவாரியை நிர்வாகம் செய்த அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது 2012ம் ஆண்டில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்தனர்.

இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

இவ்வழக்கில், அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை நடந்து, கடந்த அக்டோபர் மாதம் முடிவடைந்தது. மொத்தம் 57 சாட்சிகளிடம் விசாரணை நடந்ததில், 33 பேர் அரசு தரப்புக்கு எதிராக தொடர்ச்சியாக பிறழ் சாட்சியம் அளித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி மணிமொழி, போதிய சாட்சிகள் இல்லாததால், பொன்முடி, கவுதம சிகாமணி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்

Source link