– நமது டில்லி நிருபர் –
பொன்னியின் செல்வன் – 2 படத்தில் இடம்பெற்றுள்ள ‘வீரா ராஜ வீர’ பாடல் தொடர்பான காப்புரிமை சர்ச்சையில், ‘இந்திய பாரம்பரிய இசை மரபின் பங்களிப்புக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்’ என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பட தயாரிப்பு குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் – 2 படத்தில் இடம்பெற்ற, ‘வீரா ராஜ வீர’ பாடலின் மெட்டு, ‘சிவ ஸ்துதி’ என்ற பெயரில் தாஹர் சகோதரர்கள் உருவாக்கியதாகவும், அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்களின் மகன்களில் ஒருவரான பயாஸ் வசிபுதீன் தாகர் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பாடலின் காப்புரிமை தொடர்பாக இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டதோடு, இரண்டு கோடி ரூபாய் தொகையை நீதிமன்றத்தில் டிபாசிட் செய்யவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை டில்லி உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்தது. இதை எதிர்த்து இசைக்கலைஞர் பயாஸ் வசிபுதீன் தாஹர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
முதலில் பாடியவர் என்பதாலே, அவர் பாரம்பரிய படைப்பு ஒன்றின் ஆசிரியர் ஆகிவிட முடியாது. தாகர் சகோதரர்கள் உண்மையில் உருவாக்கியவர்களா அல்லது தாகர்வாணி மரபிலிருந்து பெற்றதை முதன்முறையாக பாடினரா என்பதே முக்கிய கேள்வி.
தாகர்வாணி மரபின் பங்களிப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் படக்குழுவினர் அங்கீகாரம் வழங்க வேண்டும். இவர்கள் போட்டி துறையில் இல்லை; மரியாதை மற்றும் அங்கீகாரத்தையே எதிர்பார்க்கின்றனர். அதை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
