நமது நிருபர்
”கமேனி கொல்லப்பட்ட பிறகு, ஈரானில் இஸ்லாமிய குடியரசின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அங்கு எந்த வெற்றிடமும் கிடையாது. குழப்பமும் ஏற்படாது. ஆட்சி மாற்றத்திட்டம் தயார் நிலையில் இருக்கிறது,” என்று, அமெரிக்காவில் வசிக்கும் ஈரானிய பட்டத்து இளவரசர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், 50 ஆண்டுக்கு முன் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஈரானின் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி ஈரானின் எதிர்காலம் குறித்து ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்து இருக்கிறார். தன் பெற்றோருடன் அமெரிக்காவுக்கு தஞ்சம் புகுந்த போது இவருக்கு வயது 18.
இளவரசர் கூறியதாவது: அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கை, ஈரானில் அதிகமான உயிர்களை பாதுகாப்பதற்கான மனிதாபிமான தலையீடாக இது இருக்கக்கூடும். இது மிகவும் முக்கியமானது. ஈரான் மக்கள் தங்கள் சக்தியை காட்டி இருக்கின்றனர். கடந்த மாதம் நீங்கள் கண்டது போல் தெருக்களில் மக்கள் ஆட்சிக்கு எதிராக துணிச்சலுடன் கோஷமிட்டனர். அந்த மக்களை கமேனி தலைமையிலான ஆட்சியாளர்கள் இத்தனை ஆண்டுகளாக நசுக்கி வைத்திருந்தனர்.
நீங்கள் இந்த ஆட்சியை ஒழித்தால் அணு ஆயுத அச்சுறுத்தல் உட்பட உலகம் எதிர்க்கொண்டுள்ள அனைத்து பிரச்னைகளும் ஒரே நேரத்தில் நீக்கிவிடும். இந்த ஆட்சி இனி இல்லை என்றால், பயங்கரவாதம், அணு ஆயுத அச்சுறுத்தல், பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழல் இவை அனைத்தும் உடனடியாக காணாமல் போய்விடும்.
ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசு செழிக்க, அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஈரானின் ஆட்சியாளர்களுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பொருளாதார தடைகள் மற்றும் ராணுவ தலையீடு மூலம் ஆட்சியின் மீது அதிகபட்ச அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
ஆட்சி வீழ்ந்தால் ஈரான் மக்களுக்கான ஜனநாயக மாற்றத்தை ஆதரிக்க நான் முன் வருவேன். அமெரிக்கா தாக்கினாலும் சரி, ஈரான் மக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்வார்கள். அத்தகைய தலையீடு ஆட்சியின் வீழ்ச்சிக்கு மட்டுமே உதவும். மக்கள் வெற்றி பெற ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஈரானின் ராணுவம் எதிர்காலத்தை கட்டி எழுப்ப அனைத்து நாடுகளும் உதவ வேண்டும்.
எங்களுக்கு யோசனைகளும், திட்டங்களும் உள்ளன. ஈரான் மிகவும் மிருகத்தனமான சர்வாதிகாரத்தில் இருந்து வெளியே வர வேண்டும். அனைவருக்கும் சம உரிமைகள் மற்றும் கண்ணியம் உள்ளிட்டவை உறுதி செய்யப்பட வேண்டுமென்றால் வெறும் வார்த்தைகளில் பேசுவது மட்டும் போதாது.
இஸ்லாமிய அரசு தூக்கியெறியப்பட்டால், எதிர்க்கட்சியால் அரசை நடத்த முடியாது என்பதுதான் பலரின் கவலை என்று நான் நினைக்கிறேன். இதற்கு உரிய தீர்வு காண முடியும்.
இவ்வாறு ரெசா பஹ்லவி கூறினார். இந்த பேட்டி கமேனி கொல்லப்படுவதற்கு முன்னதாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த பட்டத்து இளவரசர்?
* ஈரானின் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி. இவர் 50 ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்து வருகிறார். அமெரிக்க அரசியல் கட்சியினருடன் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் ஆகியவற்றுடன் நல்லுறவை கொண்டுள்ளார் இவர்.
* இவர் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரானின் மதகுரு ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று அமெரிக்காவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
* ஈரானில் வெளிநாட்டுத் தலையீட்டிற்கு ஆதரவாக ரெசா பஹ்லவி வாதிட்டு வருகிறார். இவர் வெளிநாடுகளில் ஆதரவுகளையும் திரட்டி வருகிறார்.
* இவர் அமெரிக்காவில் போர் விமான விமானியாக ராணுவப் பயிற்சி பெற்று வந்தார். வாரிசு அடிப்படையில் மன்னராக பொறுப்பேற்க வேண்டியவர், அரசியல் தஞ்சம் பெற்று வெளிநாடுகளில் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
* தனது தாய்மொழியான பாரசீகத்துடன் கூடுதலாக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர்.
* 1960ம் ஆண்டு பிறந்த இவர், அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த கடைசி ஷா மன்னரின் மூத்த மகன். இஸ்லாமிய புரட்சி ஏற்படுவதற்கு முன்னதாக, பட்டத்து இளவரசராக முடி சூட்டப்பட்டவர்.
* மன்னராட்சி முடிவுக்கு வந்த காலம் முதல் வெளிநாடுகளில் வசிக்கிறார். ஈரானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிநாடுகளில் பிரசாரம் செய்து வந்த இவர், இப்போது ஆட்சியை ஏற்படுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
