வேட்புமனு தாக்கல் இனி 'ஆன்லைன்' மட்டும்? தேர்தல் ஆணையம் திட்டம்

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை, ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய வேண்டும் என்று, தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஆன்லைனில் மனுதாக்கல் செய்யும் வசதி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. ஆனால், வேட்பாளர்கள் அதனை பயன்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் நேரடியாக படிவங்களை சரிபார்ப்பதில் நேரம் வீண், பிழைகளும் ஏற்படுகின்றன. இதை தவிர்க்கவே, தற்போது ஆன்லைன் முறையை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் ‘சுவிதா’ இணையதளம் மூலம் இந்த செயல்முறை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் தங்கள் மொபைல் எண் மூலம் ‘லாகின்’ செய்து, வாக்காளர் அடையாள எண்ணை பதிவிட்டால் போதும்; அடிப்படை தகவல்கள் தானாகவே திரையில் தோன்றும். சொத்து விபரங்கள், வழக்குகள் குறித்த பிரமாணப் பத்திரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை வீட்டிலிருந்தே பதிவேற்றம் செய்யலாம்.

ஒரே நேரத்தில் இரு வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது ஏற்படும் மோதல்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த முறை கைகொடுக்கும்.

ஆன்லைனில் மனுதாக்கல் செய்தாலும், அதன் நகலை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் குளறுபடிகள் குறைந்து, தேர்தல் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்

– நமது நிருபர்- – .

Source link