வைகோவின் திசைமாறிய பயணங்கள், ஒற்றை சீட் என்ற‌ முட்டுச் சந்தில் மதிமுக! | article related mdmk’s today strength and future

நேற்று மாலை முதல் சமூக ஊடகங்கள் முழுக்க கட்சியில் மிச்சமிருக்கிற மதிமுக தொண்டர்களின் வலிகள் நிறைந்த பதிவுகளைப் பார்க்க முடிகிறது.

மதிமுகவிலிருந்து வெளியேறிவிட்ட மல்லை சத்யா கூட, “புரண்டு புரண்டு படுத்தேன், தூக்கம் வரவில்லை, புத்தகத்தை எடுத்தால் மனம் அதன் பக்கம் திரும்பவில்லை” என்று பதிவிட்டிருக்கிறார்.

முன்பு அந்தக் கட்சியிலிருந்த வல்லம் பஷீர், “தாயுள்ளத்தோடு மதிமுகவுக்கு ஒரு இடத்தை தந்த முதல்வருக்குப் பாராட்டுகள்” என்கிறார். தமிழ்மணி என்கிற வழக்கறிஞர், “கட்சியில் பயணித்தது போதும்” என வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார்.

வேறு சிலரோ, “இந்த முடிவு நல்லதுதான். ஒரே ஒரு சீட்டுக்காக ஆசைப்படுவாரோ என்று, உணர்ச்சிவசப்பட்டுத் தேர்தலைப் புறக்கணித்துவிடுவாரோ என்று பயந்தோம்” என்கிறார்கள்.

கடினமான வார்த்தைகள்தான், ஆனால் வேறு சிறந்த உவமை கிடைக்கவில்லை. “கழுதை தேய்ந்து கட்டெறும்பானது” என்பார்களே, அதே தான்.

நான்கே இடங்களில் டெபாசிட்!

திமுகவிலிருந்து வெளியேறி மதிமுகவைத் தொடங்கிய அடுத்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 1996-ல் நடந்த சட்டசபைத் தேர்தலை தனது தலைமையில் ஒரு அணியை உருவாக்கி எதிர்கொண்டார் வைகோ. 177 இடங்களில் மதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டும், நான்கு இடங்களில் மட்டுமே வைப்புத்தொகை கிடைத்தது. தொடங்கி இரண்டே ஆண்டுகளில் இப்படியொரு முடிவை தமிழக மக்கள் ஏன் தந்தார்கள் என்பதை இப்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

முதல் தேர்தல் முடிவே இப்படி ஆனதிலேயே, வைகோவை நம்பி திமுகவிலிருந்து வெளியேறிய பலரும் சோர்வடைந்துபோனார்கள்.

அடுத்து நடந்த 2001 தேர்தலிலும் தனித்தே போட்டி. இந்த முறையும் கட்சியின் சார்பாக எவரும் சட்டசபைக்குள் செல்லவில்லை.

2006-ல்தான் அதிமுக கூட்டணியில் தனிச் சின்னத்தில் நின்று 6 இடங்களில் வென்று முதல்முறையாக சட்டசபைக்குச் சென்றது.

Source link