– நமது டில்லி நிருபர் –
தமிழக சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க.,வினர் முன் வைத்துள்ள, ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழகம் வெல்லட்டும்’ என்ற கோஷம் தொடர்பாக, டில்லியில், ராஜ்யசபாவில் நேற்று தி.மு.க., – அ.தி.மு.க., இடையே விவாதம் எழுந்தது.
ராஜ்யசபாவில், நிதி மசோதா மீதான விவாதத்தில், பேசிய தி.மு.க., – எம்.பி., வில்சன், தமிழகத்துக்கு போதுமான நிதியை மத்திய அரசு தரவில்லை என, குற்றஞ்சாட்டியதோடு, ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழகம் வெல்லட்டும்’ என கூறினார்.
அப்போது, சபை தலைவர் இருக்கையில், அ.தி.மு.க., – எம்.பி., தம்பிதுரை அமர்ந்து சபையை வழி நடத்தினார். அதனால், அவர், உடனடியாக பதிலளிக்கவில்லை.
4 மடங்கு அதிக நிதி
சில மணி நேரம் கழித்து, இதே விவாதத்தில் பேச வாய்ப்பு வந்தபோது, தம்பிதுரை பேசியதாவது: பீஹாருக்கு நிறைய நிதியையும், தமிழகத்துக்கு குறைவான நிதியையும் மத்திய அரசு தருவதாக வில்சன் கூறியது, அவரது கருத்தாக இருக்கலாம். ஆனால், தி.மு.க., அங்கம் வகித்த, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை விட, 4 மடங்கு அதிக நிதி தமிழகம் வந்துள்ளது.
நாடு முழுதும் மத்திய அரசு பல திட்டங்களை மேற்கொண்டுள்ள நிலையில், அவற்றை தி.மு.க., அரசு, சரி வர செயல்படுத்த மறுத்து வருகிறது. மத்திய அரசு அனுப்பும் அனைத்து நிதியையும், ஒரு குடும்பமே கொள்ளை அடிக்கிறது. தமிழகம், 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் தள்ளாடுகிறது.
துாக்கி எறிய முடிவு
தி.மு.க., ஆட்சியில் மட்டும் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழகம் வெல்லட்டும்’ என்கிறார் வில்சன். ஆனால், தமிழக மக்கள், தி.மு.க., அரசை துாக்கி எறிய முடிவெடுத்து விட்டனர்.
இந்த 2026 தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற மாட்டார். தமிழகம் வெற்றி பெற, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியால் மட்டுமே முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
