ஹல்வாரா விமான நிலையத்தில் இருந்து மார்ச் முதல் வாரத்தில் விமானம் இயக்கம்

சண்டிகர்: “பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில், திறக்கப்பட்டுள்ள ஹல்வாரா விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமானச் சேவைகள் மார்ச் முதல் வாரத்தில் துவங்கும்,” என, மாநில அமைச்சர் சஞ்சீவ் அரோரா கூறினார்.

பஞ்சாபின் லுாதியானா ஹல்வாராவில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தை, பிரதமர் நரேந்திர மோடி, 1ம் தேதி திறந்து வைத்தார். ஆனால், இன்று வரை விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

இந்நிலையில், பஞ்சாப் மாநில தொழிற்துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

ஹல்வாரா விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் மார்ச் முதல் வாரம் துவக்கப்படும். ஏர் இந்தியா நிறுவனம் டில்லி – ஹல்வாரா இடையே விமானச் சேவையை துவக்குகிறது.

இந்த விமான நிலையத்தால், லுாதியானா மட்டுமின்றி மோகா, பெரோஸ்பூர், பரித்கோட் மற்றும் பதிண்டா மாவட்ட மக்களும் பயன்பெறுவர். உள்ளடக்கிய முழு மால்வா பகுதிக்கும் உதவும்.

ஹல்வாரா விமான நிலையத்திலிருந்து பயணிகளின் வருகை குறித்து விமான நிறுவனங்கள் சாதகமான அணுகுமுறையைக் கொண்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை ஜலந்தருக்கு வருகை தந்தபோது, ​​ஹல்வாராவில் உள்ள முனையக் கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். பஞ்சாப் மாநில தொழிற்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த விமான நிலையம் உத்வேகம் அளிக்கும்.

இந்த விமான நிலையத்தை பஞ்சாப் அரசும் இந்திய விமான நிலையங்கள் ஆணையமும் இணைந்து, 54.67 கோடி செலவில் கட்டியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link