ஹாங்காங்கை நோக்கி கடுமையான தைபூண் நவுல் ( Typhoon Noul ) புயல் நகரும் அபாயம் இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை – ஹாங்காங் இடையேயான கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானங்களின் இரு சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. புயலின் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பாதிக்கப்பட்ட பயணிகள்
ஹாங்காங்கில் இருந்து 217 பயணிகளுடன் சனிக்கிழமை இரவு 11.50 மணியளவில் கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதே விமானம் நள்ளிரவு 12.50 மணிக்கு 220 பயணிகளுடன் மீண்டும் ஹாங்காங் புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் புயல் எச்சரிக்கை காரணமாக அந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்த தகவல் ஏற்கனவே பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததால், தகவல் கிடைக்காத சிலர் மட்டுமே சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் பயணிகளுக்கு நிலைமையை விளக்கி மாற்று ஏற்பாடுகளை செய்தனர்.
ஹோட்டல் தங்கும் வசதி மற்றும் மாற்று விமானம்
விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகள் சென்னை நகரிலுள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், வானிலை சீரான பிறகு திங்கள்கிழமை அதிகாலை சிறப்பு ஏற்பாடுகளுடன்கேத்தேபசிபிக் விமானம் மூலம் ஹாங்காங்குக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி செல்வாக்கு தெரியாம பேசக்கூடாது! எச்சரித்த ரஜினி ஆதரவாளர்
சென்னைக்கு வந்திருந்த விமானம் தற்போது சென்னை விமான நிலையத்தின் ரிமோட் பே பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் நிலவும் வானிலை சீராகும் வரை அது அங்கேயே இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹாங்காங்கிலிருந்து சென்னை வரும் சேவையும் ரத்து
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு ஹாங்காங்கிலிருந்து சென்னை வர திட்டமிடப்பட்டிருந்த கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானமும் அதே புயல் எச்சரிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இரு நகரங்களுக்கும் இடையேயான விமான போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச இணைப்பு பயணிகளும் பாதிப்பு
சென்னையில் இருந்து ஹாங்காங் செல்லும் இந்த விமானம், ஹாங்காங் மட்டுமின்றி லண்டன், டோக்கியோ, மெல்போர்ன், சீயோல், சிக்காகோ உள்ளிட்ட பல சர்வதேச நகரங்களுக்குஇணைப்பு விமானமாகவும் செயல்படுகிறது. இதனால் ஹாங்காங் வழியாக பிற நாடுகளுக்கு செல்லத் திட்டமிட்டிருந்த பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
புயல் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டாலும், பயணிகளின் பாதுகாப்பே முதன்மை என்பதால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியதும் சேவைகள் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
