ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு அமெரிக்கா சொன்ன பொய்; மறுத்து எச்சரித்த ஈரான்

டெஹ்ரான்: மேற்காசியாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் நுாற்றுக்கணக்கான எண்ணெய் கப்பல்கள் சிக்கி உள்ளன.

அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடுத்த போரையடுத்து உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை, மேற்காசிய நாடான ஈரான் மூடி வைத்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிக்கும் என்று, அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க எரிசக்தி அமைச்சர் கிரிஸ் ரைட் ஒரு பதிவில், ‘அமெரிக்க கடற்படை ஒரு எண்ணெய் டேங்கரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வெற்றிகரமாக அழைத்துச் சென்றது. உலக சந்தையில் எண்ணெய் ஓட்டம் தொடர்கிறது’ என்று கூறியிருந்தார்.

ஆனால், இந்த பதிவு, சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டது. இதனால் உலக எண்ணெய் சந்தையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் வெள்ளை மாளிகை உடனடியாக தலையிட்டு,’அமெரிக்கா கடற்படை எந்த எண்ணெய் டேங்கரையும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அழைத்துச் செல்லவில்லை’ என்று தெளிவுபடுத்தி உள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, அமெரிக்காவின் இந்த உரிமை கோரலை கடுமையாக மறுத்தது. ‘எந்த அமெரிக்க கடற்படை கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியை நெருங்கத் துணியவில்லை. இது அப்பட்டமான பொய்’ என்று ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்தது.

‘அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் நிற்கும் வரை ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம்’ என்று, ஈரான் அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி முதல் தற்போதுவரை, 10 எண்ணெய் டேங்கர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்று பிரிட்டன் கடல் வர்த்தக அமைப்பு மற்றும் சர்வதேச கடல் அமைப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் இன்னும் சிக்கியே உள்ளதால் உலகச் சந்தையில் எண்ணெய் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், இதுவரை இல்லாத அளவுக்கு எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியா, குவைத், ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள், கச்சா எண்ணெய் உற்பத்தியை வெகுவாக குறைத்துள்ளன.

தாக்கப்பட்டது பிரிட்டன் கப்பல்!

ஈரான் அருகே ஹார்முஸ் ஜலசந்தியில், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் சரக்குக் கப்பல் ஒன்று அடையாளம் தெரியாத ஏவுகணையால் தாக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல், ஓமனுக்கு வடக்கே, 20 கி.மீ., தொலைவில் இருந்தபோது தாக்குதல் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலால் கப்பலில் தீப்பிடித்து, பெரும்பாலான குழுவினர் கப்பலை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஒரு கொள்கலன் கப்பலும், தானியங்கள் மற்றும் கனிமங்களை ஏற்றிச்சென்ற கப்பலும் தாக்கப்பட்டுள்ளது.

Source link