புதுடில்லி: “ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்,” என, ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியனிடம் பிரதமர் மோடி நேற்று வலியுறுத்தினார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதற்கு பதிலடியாக, கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அரசு மூடியதால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் எரிவாயு சப்ளை பாதித்து உள்ளது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மேற்காசிய நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன், பஹ்ரைன் உட்பட பல்வேறு நாடுகளின் அதிபர்களுடன் பிரதமர் மோடி சமீபத்தில் பேசினார்.
இந்நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியனுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று பேசினார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை:
ஈரான் அதிபர் பெஷெஸ்கியனுடன் தொலைபேசியில் பேசியபோது, ரம்ஜான் மற்றும் நவ்ரூஸ் வாழ்த்துகளை தெரிவித்தேன்.
இந்த பண்டிகை காலத்தில், மேற்காசிய பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை ஏற்படும் என, நம்பிக்கை தெரிவித்தேன். அங்குள்ள உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தேன்.
இதேபோல், அப்பிராந்தியத்தில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும்படி மீண்டும் வலியுறுத்தினேன்.
ஈரானில் உள்ள இந்திய மக்களின் பாதுகாப்புக்கு அந்நாட்டு அரசு அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
