ஹெச்.டி.எப்.சி., வங்கி தலைவர் ராஜினாமா

ஹெ ச்.டி.எப்.சி., வங்கி பங்குகள் நேற்று பங்குச் சந்தையில் பெரும் சரிவை சந்தித்தன. வங்கியின் தலைவர் அதானு சக்ரவர்த்தி தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்ததே, இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ராஜினாமாவின் பின்னணி:

அதானு சக்ரவர்த்தி தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ள காரணங்கள் சாதாரணமானவை அல்ல. “கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கியில் நடந்து வரும் சில நிகழ்வுகள் மற்றும் நடைமுறைகள், எனது தனிப்பட்ட மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கியின் நிர்வாக தரம் குறித்து அவர் எழுப்பியுள்ள இந்த கேள்வி, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தி வெளியானதையடுத்து, ஹெச்.டி.எப்.சி., வங்கி பங்குகள் நேற்று வர்த்தக துவக்கத்தில் கிட்டதட்ட 9 சதவீதம் சரிந்தன. வர்த்தக நிறைவில் 5.32 சதவீதம் சரிந்து, ஒரு பங்கின் விலை 798.20 ரூபாயில் நிறைவடைந்துள்ளது.

நேற்றைய வர்த்தகத்தின் இடையில் ஹெச்.டி.எப்.சி., வங்கியின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.

ரிசர்வ் வங்கியின் வகைப்பாட்டின்படி, எஸ்.பி.ஐ., மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிகளை போலவே , ஹெச்.டி.எப்.சி ., வங்கியும் வீழ்ச்சியடைய முடியாத அளவுக்கு பெரிய நிறுவனம் என்ற பிரிவில் உள்ளது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வங்கியின் தலைவரே நிர்வாக குறைபாடுகளை சுட்டிக்காட்டி விலகியிருப்பது, சந்தையில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

நல்ல வாய்ப்பாக அமையலாம் இது குறித்து ‘ஐதாட்பிஎம்எஸ்’ இணை நிறுவனர் ஷ்யாம் சேகர் தெரிவித்ததாவது: ெஹச்.டி.எப்.சி., வங்கி தலைவர் ராஜினாமா செய்தி தற்காலிகமாக சந்தையில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தினாலும், முதலீட்டாளர்கள் இதனை ஒரு தனிநபர் சார்ந்த விஷயமாகவே கருதுவார்கள். வங்கியின் அடிப்படை வலிமையில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. தற்போது ஹெச்.டி.எப்.சி., வங்கியின் பி/இ ரேஷியோ மற்றும் விலை-புத்தக மதிப்பு ஆகியவை அதன் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிக குறைந்த விலையில் உள்ளன. எனவே, வங்கி தனது வருவாய் வளர்ச்சியை தொடர்ந்து நிலைநிறுத்தும் பட்சத்தில், பங்கின் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தற்போதைய சரிவு என்பது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கவலை வேண்டாம் ஹெச்.டி.எப்.சி., வங்கி வலுவான நிதிநிலையுடனும் திறமையான மேலாண்மை குழுவையும் கொண்ட உள்நாட்டு முக்கியத்துவம் வாய்ந்த வங்கி. எங்களின் அவ்வப்போதைய மதிப்பீட்டின்படி, வங்கியின் செயல்பாடுகள் அல்லது நிர்வாகம் குறித்து தற்போதைக்கு எந்தவிதமான கவலைகளும் இல்லை. வங்கி போதுமான மூலதனத்துடனும், திருப்திகரமான நிதிநிலை மற்றும் போதிய பணப்புழக்கத்துடனும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி, வங்கியின் இயக்குநர்கள் குழுவுடன் தொடர்ந்து ஆலோசனை செய்யப்படும். – ரிசர்வ் வங்கி.

ஹெச்.டி.எப்.சி., பங்கு(லைன் கிராப்) துவக்க விலை ரூ. 770.00 குறைந்த விலை ரூ. 770.00 ஒரு நாள் உயர்வு ரூ. 815.65 நிறைவு 798.20 (-5.32 %)

பங்கின் நிலை: பி/இ., (டி.டி.எம்.,) 16.76 பி/பி., விகிதம் 2.31 இ.பி.எஸ்., (டி.டி.எம்.,) 50.31 52 வார உச்சவிலை ரூ.1,020.50 52 வார குறைந்தவிலை ரூ.770.00

நிதிநிலை: 2025-26 காலாண்டு வரிக்கு பிந்தைய லாபம் முதல் காலாண்டு ரூ.18,160 கோடி 2ம் காலாண்டு ரூ.18,164 கோடி 3ம் காலாண்டு ரூ.18,650 கோடி

வங்கியின் கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.,கள் (டிச.,31, 2025) கிளைகள் 9,616 ஏ.டி.எம்.,கள் 21,176

மியூச்சுவல் பண்டுகள் 734 வங்கியில் முதலீடு செய்துள்ள திட்டங்கள் ரூ.3.40 லட்சம் கோடி பண்டு முதலீட்டின் மொத்த மதிப்பு 26% மியூச்சுவல் பண்டுகளில் இவ்வங்கியின் பங்கு

யார் இந்த அதானு சக்ரவர்த்தி? குஜராத் கேடரை சேர்ந்த 1985ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் பொருளாதார விவகாரங்கள் மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை ஆகிய துறைகளில் செயலராக பணியாற்றியவர். கடந்த 2020ல் ஓய்வு பெற்ற இவர், மே 2021ல் ஹெச்.டி.எப்.சி., வங்கியின் பகுதி நேர தலைவரானார். இவரது பதவிக்காலம் 2027 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. ஹெச்.டி.எப்.சி., லிமிடெட் மற்றும் ஹெச்.டி.எப்.சி., வங்கி இடையிலான இணைப்பு இவர் பொறுப்பில் இருக்கும்போதுதான் நடந்தது.

Source link