ஹைதராபாத்: தெலுங்கானாவில், விஷ ஊசி செலுத்தி 100 தெருநாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத்: தெலுங்கானாவில், விஷ ஊசி செலுத்தி 100 தெருநாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள காமரெட்டி மாவட்டத்தில், கடந்த ஜனவரியில் ஒரே வாரத்தில், 200 தெருநாய்கள் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டன. இதே போல, பல்வேறு மாவட்டங்களிலும், 500க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டன.

போலீசில் புகார்

இந்நிலையில், இது போன்ற சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது. மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள கிஷ்டாப்பூர் கிராமத்தில், கடந்த 7ம் தேதி நள்ளிரவில், 100க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்ட நிலையில், அவற்றின் உடல்கள் ஆற்றங்கரையோரம் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து, கிஷ்டாப்பூர் கிராம பஞ்சாயத்து தலைவர், செயலர் ஆகியோர் மீது, விலங்குகள் நல ஆர்வலர் கவுதம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், ‘தெருநாய்களை கொல்ல கிஷ்டாப்பூர் கிராம பஞ்சாயத்து தலைவர், செயலர் ஆகியோர் இரு நபர்களை வாடகைக்கு அமர்த்தி உள்ளனர். அவர்கள் நாய்களுக்கு விஷ ஊசிகளை செலுத்தி கொன்று, பின், உடல்களை ஆற்றங்கரையோரம் புதைத்துள்ளனர்’ என, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதிர்ச்சி

இதன்படி, விலங்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர், செயலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களில் தெருநாய்கள் அடுத்தடுத்து விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்வது தெலுங்கானா மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

என்ன காரணம்?

‘தெலுங்கானாவில், கடந்த சில மாதங்களாக 1,000க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கொல்லப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில், தெருநாய்கள் மற்றும் குரங்குகளின் தொல்லையை ஒழிப்பதாக வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்தனர். வெற்றி பெற்றவர்கள், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே, சட்ட விரோதமாக ஆட்களை பணியமர்த்தி தெருநாய்களை கொலை செய்வதாக சந்தேகிக்கப்படுகிறது’ என, சம்பவம் நடந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Source link