தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக இன்று காலை பள்ளிக்கு சென்றனர். தேர்வு தொடங்குவதற்கு முன்பு பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், பள்ளி அருகே பெரியதெருவில் சாலையில் குரைத்து கொண்டு ஓடிய நாய், நடந்து சென்ற பத்துக்கும் மேற்பட்டோரை கடித்தது. இதையடுத்து சாலையில் ஓடிய வெறி நாய், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது.

அப்போது, படித்து கொண்டிருந்த ஆறு மாணவிகளை கடித்தது. மற்ற மாணவிகள் பயத்தில் அலறி அடித்து வகுப்புக்குள் ஓடினர். கடிப்பட்ட மாணவிகளும் தேர்வு தொடங்க உள்ள நிலையில் நாய் கடித்ததை நினைத்து கலங்கியதுடன் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து, வெறிநாய் கடித்த 6 மாணவிகளும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
