1,000க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் மூடல்; காத்திருப்பு போராட்டம் நடத்திய டாஸ்மாக் ஊழியர்கள் கைது

சென்னை: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவுப் பணியாளர்கள் நேற்றுமுன்தினம் முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநிலம் முழுதும் நேற்று இரண்டாம் நாளாக, 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால், தமிழகம் முழுதும் 1,000க்கும் மேற்பட்ட, சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டன. சென்னையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட, 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் தமிழகம் முழுதும் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். சத்துணவு ஊழியர்கள் போராட்டத்திற்கு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, ‘ஆக்டோ ஜியோ’ ஆதரவு தெரிவித்துள்ளது.

100 சதவீதம் உணவு வினியோகம்

சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தையொட்டி, நேற்று மாநிலம் முழுதும் 1,000க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் மூடப்பட்ட நிலையில், காலை உணவுத் திட்ட பணியாளர்கள், அருகில் உள்ள மையங்கள் வழியே மாணவர்களுக்கு, 100 சதவீதம் உணவு வினியோகம் செய்யப்பட்டதாக, சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊரக இயக்க பணியாளர்கள்

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2ம் தேதி முதல், சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மூன்றாம் நாளான நேற்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில், 1,500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்து, திருமங்கலத்தில் உள்ள சமூதய கூடத்தில் தங்க வைத்தனர்; மாலையில் விடுவித்தனர்.

பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள்

‘டெட்’ தேர்வு மதிப்பெண் குறைப்பு உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில், சென்னையில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் முன் நடந்த போராட்டத்திற்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் ஐயனார் தலைமை வகித்தார். போராட்டத்தில் பங்கேற்ற பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளி கல்லுாரி மாணவர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷமிட்டனர்.

‘டாஸ்மாக்’ பணியாளர்கள்

தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர் ஏ.ஐ.டி.யு.சி., சங்கத்தினர், சென்னை எழும்பூரில் நேற்று இரண்டாம் நாளாக, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து, கூட்டுக்குழுவினர் கூறுகையில், ‘எழும்பூரில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த போலீசார், வேன்களில் ஏற்றி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று அலைக்கழித்தனர். பின், ஆலந்துார், மடிப்பாக்கம் பகுதியில், நான்கு மண்டபங்களில் தங்க வைத்தனர். மதிய உணவு சரியான நேரத்தில் வழங்கவில்லை. நியாயமான கோரிக்கைக்கு போராடிய எங்களை, போலீசார் துன்புறுத்தியது கண்டனத்திற்குரியது’ என்றனர்.

தெலுங்கு செட்டி சங்கம்

தமிழ்நாடு 24 மனை தெலுங்கு செட்டி, சாது செட்டி, தெலுங்கு செட்டி, தெலுங்குப் பட்டி செட்டி என அழைக்கப்படும், நான்கு சமூகத்தினரும், ஒரே கலாசாரம், திருமண உறவு கொண்டவர்கள். ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தும், இட ஒதுக்கீட்டில் 24 மனை தெலுங்கு செட்டி, சாது செட்டி, தெலுங்கு செட்டி, உள்ளிட்ட மூன்று சமூகத்தினர், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், தெலுங்கு பட்டி செட்டி சமூகத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் இருக்கும் முரண்பாடுகளை கலைந்து, அனைத்து சமூகத்தினரையும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு 24 மனை தெலுங்கு செட்டி சமூக பாதுகாப்பு சங்கம் சார்பில், சென்னை, சிவானந்தா சாலையில் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்டோர் குழந்தைகளுடன், கோட்டை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மருத்துவ பணியாளர் போராட்டம் வாபஸ்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள், பணி நிரந்தரம் கோரி, சென்னையில் 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார், நேற்று முன்தினம் பேச்சு நடத்தினார். அதில், பணியாளர்களின் அனுபவத்திற்கு ஏற்ப, 3,000 ரூபாய் வரை ஊதிய உயர்வு வழங்குவதாக, அரசு தரப்பில் உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர். இதுகுறித்து, பல்நோக்கு மருத்துவ பணியாளர்களின் கூட்டமைப்பின் தலைவர் தமிழ்செல்வன் கூறியதாவது: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, சம்பளத்துடன் கூடிய வார விடுப்பு ஆகிய கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தோம். முதல் கட்டமாக, ஊதிய உயர்வு வழங்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தொடர் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source link