சம்பள உயர்வு என்பது நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் இருக்காது. ஏன் தெரியுமா? அதற்கான காரணம் இதுதான்.
அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 8ஆவது ஊதியக் குழுவின் கீழ் பிட்மென்ட் காரணி அடிப்படையில் எவ்வளவு சம்பளம் அதிகரிக்கலாம் என்ற எளிமையான கணக்கீடு இதோ..!
ஃபிட்மென்ட் காரணி 2.0!
8ஆவது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஃபிட்மென்ட் காரணி 2.0-ஐ அமல்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதங்கள் அதிகரித்துள்ளன. இந்தக் காரணி ஊழியரின் அடிப்படை ஊதியத்தை இரட்டிப்பாக்கினாலும், அவர்களின் ஒட்டுமொத்த மாதச் சம்பளமும் அதே விகிதத்தில் இரட்டிப்பாகும் என்று அர்த்தமல்ல. மொத்தச் சம்பளம் பல்வேறு காரணிகளைக் கணக்கில் கொண்டு கணக்கிடப்படுகிறது. எனவே, இது அடிப்படை ஊதியம் அதிகரிக்கும் வேகத்திலிருந்து மாறுபட்ட விகிதத்தில் அதிகரிக்கிறது.
பெரிய உயர்வு இருக்காதா?
ஒரு ஊழியரின் மொத்தச் சம்பளமானது அடிப்படை ஊதியம், அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA) மற்றும் பிற சலுகைகளை உள்ளடக்கியது. புதிய ஊதியக் குழு நடைமுறைப்படுத்தப்படும்போது புதிய திருத்தச் சுழற்சி தொடங்குவதற்கு முன் அகவிலைப்படி (DA) பொதுவாக பூஜ்ஜியமாக மாற்றியமைக்கப்படுகிறது. வீட்டு வாடகைப்படி (HRA) திருத்தப்பட்ட அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதே சமயம் போக்குவரத்து மற்றும் பிற படிகள் தனியாகச் சேர்க்கப்படுகின்றன. இதன் விளைவாக, மொத்தச் சம்பளத்தில் ஏற்படும் உயர்வு பொதுவாக அடிப்படை ஊதிய உயர்வை விடக் குறைவாகவே இருக்கும்.
வெவ்வேறு ஃபிட்மென்ட் காரணிகளின் கீழ் சம்பளம்!
உதாரணமாக, ரூ. 18,000 அடிப்படை ஊதியம் கொண்ட ‘நிலை 1’ (Level 1) ஊழியர் ஒருவருக்கு 2.0 ஃபிட்மென்ட் காரணி வழங்கப்பட்டால் கணிக்கப்பட்ட மொத்தச் சம்பளம் 34,200 ரூபாயில் இருந்து ரூ. 44,640 ஆக உயரும். இது 31 சதவீத உயர்வாகும். 2.38 ஃபிட்மென்ட் காரணியின் கீழ், மொத்தச் சம்பளம் 53,122 ரூபாயை எட்டலாம். அதே சமயம் 2.57 காரணி மூலம் அது 57,362 ரூபாயாக உயரலாம். உயர் ஊதிய நிலைகளிலும் இதே போன்ற போக்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, சதவீத அடிப்படையிலான உயர்வு அடிப்படை ஊதிய உயர்வை விட மிகக் குறைவாகவே இருக்கும்.
அதிக ஊதிய நிலைகளில் என்ன நடக்கும்?
தற்போதைய அடிப்படை ஊதியம் ரூ. 56,100 மற்றும் தோராயமான மொத்த ஊதியம் ரூ. 106,590 ஆக உள்ள நிலை 10 (Level 10) ஊழியர் ஒருவருக்கு, 2.0 என்ற ஃபிட்மென்ட் காரணி மொத்த ஊதியத்தை 139,128 ரூபாயாக உயர்த்தலாம். 2.38 என்ற பெருக்கி இந்த மதிப்பீட்டை ரூ. 165,562 ஆக உயர்த்தும். அதே சமயம் 2.57 என்ற ஃபிட்மென்ட் காரணி அதை ரூ. 178,779 ஆக உயர்த்தலாம். இந்த புள்ளி விவரங்கள் விளக்கத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதில் போக்குவரத்துப் படிகள் மற்றும் பிற சலுகைகள் சேர்க்கப்படவில்லை.
முந்தைய ஊதியக் குழுக்களின் நிலை!
அதிக ஃபிட்மென்ட் காரணி எப்போதும் கையில் கிடைக்கும் ஊதியத்தில் அதே விகிதத்திலான உயர்வை ஏற்படுத்துவதில்லை என்பதை முந்தைய ஊதியக் குழுக்கள் காட்டுகின்றன. 7ஆவது ஊதியக் குழு 2.57 என்ற ஃபிட்மென்ட் காரணியைப் பயன்படுத்தியது. இருப்பினும் மொத்த ஊதியத்தில் ஏற்பட்ட உண்மையான உயர்வு கணிசமாகக் குறைவாகவே இருந்தது. அதேபோல, 6ஆவது ஊதியக் குழுவின் கீழ் ஊதிய மாற்றங்கள் மாறுபட்டன. ஏனெனில் படிகள் (allowances) தனித்தனியாக மாற்றியமைக்கப்பட்டன. 8ஆவது ஊதியக் குழுவிற்கான இறுதி ஃபிட்மென்ட் காரணி அல்லது திருத்தப்பட்ட ஊதிய அட்டவணையை அரசு இன்னும் அறிவிக்காததால், ஊழியர்கள் தற்போதைய மதிப்பீடுகளை இறுதியானதாகக் கருதாமல் ஒரு குறியீடாகவே கருத வேண்டும்.
அரசு ஊழியர்கள் காத்திருக்க வேண்டும்!
தற்போதைய 8ஆவது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிக ஃபிட்மென்ட் காரணியை மாத வருமானம் நேரடியாக இரட்டிப்பாவதாகப் புரிந்துகொள்ளக் கூடாது. மொத்த ஊதியம் என்பது பல்வேறு படிகள் மற்றும் திருத்தப்பட்ட ஊதியக் கட்டமைப்புகளைச் சார்ந்திருப்பதால், இறுதி உயர்வு என்பது அடிப்படை ஊதியத்தில் ஏற்படும் உயர்விலிருந்து கணிசமாக வேறுபடலாம். இறுதி ஃபிட்மென்ட் காரணி என்பது ஊதிய அட்டவணை மற்றும் படிகளுக்கான கட்டமைப்பு ஆகியவை உண்மையான ஊதிய மாற்றத்தைத் தீர்மானிக்கும் என்பதால் ஊழியர்கள் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்க வேண்டும்.
