2011 மக்கள் தொகை அடிப்படையில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்

புதுடில்லி: மத்திய பா.ஜ., அரசு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பார்லி., மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ என்ற சட்டம், 2023ல் நிறைவேற்றப்பட்டது.

கணக்கெடுப்பு

எனினும் இது, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதிகள் மறுவரையறை முடிந்த பின் தான் அமலுக்கு வரும். தற்போதைய நிலவரப்படி, 2027-ல் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடையும். இதனால், 2029 லோக்சபா தேர்தலுக்குள் இட ஒதுக்கீடு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல் படுத்த மத்திய அரசு திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி, லோக்சபா மொத்த இடங்களின் எண்ணிக்கை தற்போதைய, 543-லிருந்து, 816 -ஆக உயர்த்தப்படும். இதில், மகளிருக்கு இட ஒதுக்கீடான, 33 சதவீதம் அதாவது, 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும், அடுத்த வாரம், ராஜ்ய சபாவில் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதரவு

இது தொடர்பாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு ஏற்கனவே பேச்சு நடத்தி உள்ளது. கடந்த, 2023ல் நிறைவேற்றப் பட்ட மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தின் பிரிவு, 5-ஐ மத்திய அரசு திருத்த வேண்டியிருக்கும். ஏனெனில், அந்த பிரிவு இட ஒதுக்கீட்டை புதிய மக்கள் தொ கை கணக் கெடுப்புடன் இணைத்து உள்ளது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு, 368(2)ன் படி, இந்த திருத்த மசோதா பார்லி.,யின் இரு சபைகளில், மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும். லோக்சபா, ராஜ்யசபாவில் பா.ஜ.,வுக்கு தனி பெரும்பான்மை இல்லாத நிலையில், கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் இந்த திருத்த மசோதாவை நிறைவேற்றலாம்.

Source link