டெக்சாஸ்: சுமார் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய, உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஆரக்கிள் முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிஐஓ மற்றும் முதலீட்டு வங்கியான டிடி கோவன் நடத்திய ஆய்வுகளை அடிப்படையாக வைத்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்; செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையங்களை உருவாக்குவதற்கான மிகப்பெரிய திட்டங்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஆரக்கிள் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக, இந்த நிறுவனம் சுமார் 20,000 முதல் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யக்கூடும். இத்தனை ஆண்டுகளில் ஆரக்கிள் நிறுவனம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கை இதுவாகும்.
சாம் ஆல்ட்மேனின் ஓபன் ஏஐ உட்பட முக்கிய வாடிக்கையாளர்களுக்காக தரவு மையங்களை அமைக்கும் பெரிய திட்டங்களை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதிக செலவுள்ள ஏஐ திட்டங்கள் ஆரக்கிள் நிறுவனத்திடம் உள்ளன. ஆரக்கிளின் தரவு மைய விரிவாக்கத்திற்கு சுமார் 13 லட்சம் கோடி தேவைப்படுகிறது. சமீபகாலமாக பல அமெரிக்க வங்கிகள் இத்திட்டங்களுக்குக் கடன் வழங்கத் தயக்கம் காட்டி வருவதால், நிதி திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் தான் தங்களின் நிறுவனங்களில் பணியாற்றும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ஊழியர்களை பணிநிறுத்தம் செய்ய ஆரக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், ரூ.800 கோடி முதல் ரூ.1,000 கோடி வரையிலான ரொக்கம் மிச்சமாகும் என்று கணக்கு போடும் அந்த நிறுவனம், இதனை ஏஐ தரவு மையங்களை அமைக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, 2025ல் ஆரக்கிள் ஏற்கனவே 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருந்தது.
அதுமட்டுமில்லாமல், கடந்த 2022ல் ரூ.2,830 கோடிக்கு வாங்கப்பட்ட சுகாதார மென்பொருள் பிரிவான செர்னரை விற்பனை செய்யுவும் ஆரக்கிள் திட்டமிட்டுள்ளது, இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை ஆரக்கிள் நிறுவனம் இந்த அறிக்கை குறித்து அதிகாரப்பூர்வமான எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
